விஜயகாந்த் விவகாரம்.. தட்ஸ்தமிழ் சுப.வீ. கட்டுரைக்கு மு.க.ஸ்டாலின் மறுப்பு
சென்னை: யாருக்கும் காத்திருக்காமல் 200 இடங்களில் திமுக தனித்தே போட்டியிட வேண்டும் என்ற சுப.வீரபாண்டியன் கூறியது அவருடைய சொந்தக் கருத்து. அவர் திமுகவின் உறுப்பினரல்ல. தனியாக ஒரு இயக்கத்தை நடத்தி வருபவர் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மக்கள் தெளிவாக உள்ளதால் அதிமுக ஆட்சி அப்புறப்படுத்தப்படும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நமது ஒன் இந்தியா தட்ஸ் தமிழ் இணையதளத்தில் கட்டுரைகள் எழுதி வரும் சுப. வீரபாண்டியன், இரு தினங்களுக்கு முன்பு எழுதிய கட்டுரையில், தி.மு.க., அ.தி.மு.க. தவிர்த்த எந்த ஒரு கட்சியும், தமிழ்நாட்டில் அந்த 5 சதவீத வாக்குகளைக் கூடப் பெற்றிருக்கவில்லை என்பதால், அதுவும் அந்தக் கட்சிக்கான வலிமையாக ஆகி விடுகிறது. தமிழக மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு வரும்வரையில், இவை இரண்டும் விஜயகாந்துக்கு வலிமையாக இருக்கலாம்.
ஆனால் தலைமைப் பண்பு, பேச்சில் தெளிவு, நடைமுறையில் நாகரிகம் ஆகியனவற்றை எல்லாம் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், இந்த இரண்டு 'வலிமைகள்' மட்டும் போதும் என்று அவர் கருதுவாரெனில், அது நீண்ட காலம் நிலைக்காது. அரசியல் நேர்மையை அவரால் தொடர்ந்து அவமதித்துவிட முடியாது.
பேச்சுக்காகக் கூட, " மக்கள் தொண்டாற்ற வருகிறேன்" என்று கூறாமல், 'கிங்'காக மட்டுமே வரக் காத்திருக்கும் அவருக்காகக் காத்திருப்பது, பெரிய கட்சிகளின் தகுதிக்கு உரியதன்று. இனி அவருக்காகக் காத்திருக்கப் போவதில்லை, 200 தொகுதிகளில் நாங்களே போட்டியிடப் போகிறோம் என்று தி.மு.க. அறிவிக்குமானால், அது தொண்டர்களுக்கு ஊக்கம் தரும், வெற்றியின் முதல் படியாக அமையும்!! என்று கூறியிருந்தார். இந்த கட்டுரை குறித்து சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்கள் மு.க.ஸ்டாலினிடம் எழுப்பிய கேள்விக்கு சுப. வீரபாண்டியனின் கருத்து அவரது சொந்த கருத்து. அது திமுக கருத்தல்ல என்று கூறினார்.
மார்ச் 1ம் தேதி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள். அவரது பிறந்த நாளை திமுகவினர் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், சென்னை கொளத்தூர் தொகுதியில் 178 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் நேற்று பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில், கல்வி உதவித் தொகை, மருத்துவ உதவித் தொகை, தையல் இயந்திரங்கள், மடிக்கணினி, சலவைப் பெட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர மிதிவண்டி, மீன்பாடி வண்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது அவர், தமிழகத்தில் நடக்கும் சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்ட திமுகவினரும், பொதுமக்களும் உறுதியேற்க வேண்டும் என்பதுதான் எனது பிறந்த நாள் செய்தி என்று ஒரு வாரத்துக்கு முன்பே அறிவித்திருந்தேன்.
தேர்தல் நேரத்தில் பல்வேறு வாக்குறுதிகளை முதல்வர் அளித்துக்கொண்டிருக்கிறார். ஆனால், மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். அவரது ஆட்சி விரைவில் அப்புறப்படுத்தப்படும்.
யாருக்கும் காத்திருக்காமல் 200 இடங்களில் திமுக தனித்தே போட்டியிட வேண்டும் என்ற சுப.வீரபாண்டியன் கூறியது அவருடைய சொந்தக் கருத்து. அவர் திமுகவின் உறுப்பினரல்ல. தனியாக ஒரு இயக்கத்தை நடத்தி வருபவர் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.












Click it and Unblock the Notifications