ஸ்டெர்லைட் மட்டுமில்லை.. தூத்துக்குடி தூக்கம் கெடுத்த மற்றொரு ஆலை.. நச்சு புகை வெளியேறியதால் பீதி
ஆலையிலிருந்து வந்த திடீர் நச்சு புகையால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
Recommended Video
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே ஆலையிலிருந்து திடீர் நச்சு புகை வெளியானதால் பொது மக்கள் பீதியில் உள்ளனர்.
தூத்துக்குடியில் ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மேலும் ஒரு ஆலையில் இருந்து நச்சு புகை வெளியானதால் பொது மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.
தூத்துக்குடி ஸ்பிக் நகர் ஆலையிலிருந்து இரவு திடீரென நச்சு புகை வெளியானது. இதனால் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து சூசைநகர், முத்தையாபுரம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொது மக்கள் நள்ளிரவு 1 மணி அளவில் ஸ்பிக் ஆலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தினால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது பொது மக்கள் ஸ்பிக் நகரில் இருந்து அதிகாரிகள் வர வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து ஸ்பிக் ஆலை அதிகாரிகள் வந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இனிமேல் இதுபோன்ற சம்பவம் இனி நடக்காது என அவர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து பொது மக்கள் கலைந்து சென்றனர். எனினும் ஆலையிலிருந்து எந்நேரமும் நச்சு புகை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் தற்போது வரை அச்சத்துடனே காணப்படுகின்றனர்.