மகனா... மைத்துனரா... ! கௌதம் சிகாமணி vs சுதீஷ்: கள்ளக்குறிச்சியில் வெற்றி யாருக்கு?
தொகுதி மறுசீரமைப்புக்கு பின் கடந்த 2009ம் ஆண்டு கள்ளக்குறிச்சி தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. இந்த தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிகவின் சுதீஷ் மற்றும் திமுக கூட்டணி சார்பில் பொன்முடியின் மகன் கௌதம் சிகாமணி ஆகியோர் வேட்பாளர்களாக நிற்கிறார்கள்.
இதேபோல் அமமுக சார்பில் கோமுகி மணியன், மக்கள் நீதி மய்யம் சார்பில் கணேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் சர்புதீன் ஆகியோர் வேட்பாளர்களாக நிற்கிறார்கள்.
இதில் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் மற்றும திமுக முன்னாள் அமைச்சர் பொன் முடியின் மகன் கௌதம் சிகாமணி ஆகியோருக்கு இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.
காமராஜ் வெற்றி
2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட காமராஜ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் மணிமாறனை விட சுமார் 2 லட்சத்து 23 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட ஈஸ்வரன் ஒரு லட்சத்து 64 ஆயிரம் வாக்குகள் பெற்றார்.
சூப்பர் போட்டி.. 2 ஒலிம்பிக் வீரர்கள் நேருக்கு நேர் மோதும் தேர்தல்.. ராஜஸ்தானில் சுவாரசியம்!
திமுக 2
கள்ளக்குறிச்சியில் மக்களவை தொகுதியில் ரிஷிவந்தியம், சங்கராபுரம், ஆத்தூர் (எஸ்சி), கெங்கவல்லி (எஸ்சி), கள்ளக்குறிச்சி (எஸ்சி), ஏற்காடு (எஸ்டி) என 6 தொகுதிகள் உள்ளன. இதில் ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. கள்ளக்குறிச்சி உள்பட மற்ற 4 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
தேமுதிக விருப்பம்
கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுக கடந்த முறை மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வலுவாக இருந்தது. இதேபோல் தேமுதிகவும் ஒன்றறை லட்சம் வாக்குகள் பெற்று இருந்தது. இதனால் கள்ளக்குறிச்சியில் நின்றால் நிச்சயம் வெற்றி என்று நம்பிய தேமுதிக, இந்த தொகுதியை அதிமுகவிடம் இருந்து போராடி பெற்றுள்ளது.
கௌதம் சிகாமணி
திமுகவின் முன்னாள் அமைச்சர் பொன் முடி, விழுப்புரம் தனி தொகுதி என்பதால், தனது மாவட்டத்துக்குள் வரும் கள்ளக்குறிச்சி தொகுதியை தனது மகன் கௌதம் சிகாமணிக்காக கேட்டு வாங்கி உள்ளார். ஜெயலலிதா மறைவு, அமமுக பிளவு உள்ளிட்ட காரணங்களால் பலவீனமாக இருக்கும் அதிமுகவை வீழ்த்தி கள்ளக்குறிச்சியை வெல்லமுடியும் என கௌதம் சிகாமணி நம்புகிறார்.
சாதகம் யாருக்கு
3 எஸ்சி, ஒரு எஸ்டி தொகுதிகள் உள்ள நிலையில் இங்கு தலித் வாக்குகளை யார் அதிகம் பெருகிறார்களோ அவர்களே வெல்வதற்கான வாய்ப்பு அதிகமாகும். இதற்கிடையே திருமாவளவனின் விசிக இந்த முறை திமுகவுடன் சேர்ந்திருப்பது அக்கட்சிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. அதேநேரம் அதிமுக 3 எஸ்சி தொகுதிகள் மற்றும் ஒரு எஸ்டி தொகுதிகளில் கடந்த முறை அதிமுகவே வென்று இருப்பதால் தேமுதிகவுக்கு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.
கடும் போட்டி
அதிமுகவின் ஓட்டுகள் தமக்கு அப்படியே விழும் என்ற நம்பிக்கையில் தேமுதிகவின் சுதீஷ் இரண்டாவது முறையாக களம் லோக் சபா தேர்தலில் (கடந்த முறை சேலம்) இறங்குகிறார். இதேபோல் பொன் முடி மகன் கௌதம் சிகாமணியும் முதல் முறையாக அரசியல் களம் காணுகிறார். இருவருக்கும் கடும் போட்டி நிலவும் நிலையில், வெல்லப்போவது யார் என்பது மே 23 ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தெரிந்துவிடும்.