ஜல்லிக்கட்டு நடத்தும் வரை ஓயாது போராட்டம் - மெரீனாவில் அலை அலையாய் திரளும் இளைஞர் பட்டாளம்
ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அரசு உத்தரவாதம் அளிக்காத வரைக்கும் எங்களின் போராட்டம் ஓயாது என்று மெரீனா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை: ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மாநில அரசு ஆதரவு அளிக்கும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிடும் வரை எங்களின் போராட்டம் தொடரும் என்று சென்னை மெரீனா கடற்கரையில் விவேகானந்தர் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
உச்சநீதிமன்ற தடை காரணமாக மதுரை மாவட்டத்தில் பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூரில் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. மஞ்சுவிரட்டு, ஏறுதழுவுதல், சேவல் சண்டைகளும் நடைபெறவில்லை.
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டை தடை செய்வதா? என்று கேட்டு இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தகோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி சென்னை தொடங்கி நெல்லை வரை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேச்சுவார்த்தை தோல்வி
மெரீனா கடற்கரையில் விவேகானந்தர் இல்லம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாவது நாளாக போராட்டம் இன்றும் நீடிக்கிறது. சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் அரசு சார்பில் நடத்தப்பட்ட நான்குகட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
தொடரும் போராட்டம்
சென்னை எழும்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவருத்ரையாவிடம் இளைஞர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் முதல்வர் அறிக்கை வெளியிட இயலாது எனவும் வருவாய் கோட்டாட்சியர் கூறியுள்ளார். இதனையடுத்து போராட்டம் தொடரும் என இளைஞர்கள் தெரிவித்தனர்-
விடிய விடிய போராட்டம்
பெண்கள், குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக சுமார் 10 ஆயிரம் பேர் வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் அவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளான உணவு, தண்ணீர், மருந்துகள் போன்றவைகளைக் கேட்டு முகநூல் வழியே கோரிக்கைகள் விடுத்தனர். பலரும் அங்கேயே கடற்கரை மணலில் படுத்துறங்கினர்.
விடிய விடிய போராட்டம் நடைபெற்ற போதும் அமைதியாக நடைபெறும் போராட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று போலீசார் கூறியதை அடுத்து மாணவர்கள் அறவழியில் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
திரளும் கூட்டம்
போராட்டத்திற்கு வருமாறு வாட்ஸ் அப், பேஸ்புக்கில் அழைப்பு விடுத்தை அடுத்து அலை அலையாக இளைஞர்கள் திரண்டு வந்து கொண்டிருக்கின்றனர்.
காலை நேரத்தில் மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லாமலும், பணிகளுக்கு செல்லாமல் இளைஞர்களும் மெரீனா கடற்கரைக்கு அலை அலையாக திரண்டு வருவதால் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. முதல்வர் பன்னீர் செல்வம் பேச்சுவார்த்தைக்கு வரும் வரை போராட்டம் நீடிக்கும் என்று கூறியுள்ளனர். முதல்வர் பேச்சுவார்த்தைக்கு வருவாரா?