பிளாஷ் பேக்: "தமிழக மக்களுக்கு சரியான பாடம்"... ஜெ. பதவி நீக்கத்தை வரவேற்ற சு. சாமி!
சென்னை: முதல்வர் பதவியில் ஜெயலலிதா இருந்தது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை முதல் ஆளாக அப்போதைய ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி வரவேற்றார்.
டான்சி நில ஊழல் வழக்கில் இவரும் ஒரு மனுதாரர் ஆவார்.
மேலும் உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கிலும் இவரே நேரடியாகவும் வாதாடினார்.
சூடாக வாதம் புரிந்த சாமி
உச்சநீதிமன்ற வாதத்தின்போது தமிழகத்தில் உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். ஜெயலலிதாவுக்கு முதல்வராகப் பதவிப்பிரமாணம் செய்து வைத்து சட்டவிரோதம் என்று பல சட்ட நுனுக்கங்களை எடுத்து வைத்து வாதாடினார்.
தகுதியே இல்லை
சுப்ரீம் கோர்ட் வாதத்தின்போது பல சட்ட நுனுக்கங்களை எடுத்து வைத்து சாமி வாதாடினார். டான்சி வழக்கில் 3 தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட்டதே சட்டவிரோதமானது. மேலும் அவரது அரசும் சட்டவிரோதமான அரசுதான். அந்த அரசு எடுத்த அனைத்து முடிவுகளையும் ரத்து செய்ய வேண்டும். ஜெயலலிதாவைக் கைது செய்ய வேண்டும் என்று காட்டமாக வாதாடினார் சுப்பிரமணியம் சாமி.
தமிழகத்திற்குப் பொன்னாள்
மேலும், ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றது செல்லாது என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை "தமிழகத்திற்கு இந்தநாள் ஒரு பொன் நாளாகும்" என்று வர்ணித்திருந்தார் சாமி.
மக்களுக்குச் சரியான பாடம்
இதுகுறித்து அவர் கூறுகையில், உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, ஜெயலலிதாவுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கே ஒரு பாடமாக இருக்கும்.
மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும்
தேர்தலில் போட்டியிட முடியாத ஒருவரை முதல்வராகத் தேர்ந்தெடுக்கக் கூடாது என்று இனியாவது தமிழக மக்கள்கற்றுக் கொள்ளட்டும்.
வேறு முதல்வரை நியமிக்கக் கூடாது
தமிழகத்தில் தற்போது வேறு ஒரு முதல்வரை நியமிக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. ஜெயலலிதாவை முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தது சட்டத்திற்கு எதிரான ஒரு செயலாகும். இதனால், தமிழகத்தில் உடனடியாக ஜனாதிபதி ஆட்சியைப் பிரகடனம் செய்ய வேண்டும் என்று சாமி கூறியிருந்தார்.
வந்தார் புது முதல்வர்....!
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு புதிய முதல்வரை ஜெயலலிதா தேர்வு செய்து, அதிர்ச்சியில் இருந்த அரசியலை ஆச்சரியத்திற்கு மாற்றினார். கிட்டத்தட்ட லாலு பிரசாத் போல அவர் செயல்பட்ட விதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.