தமிழக மீனவர்கள் தூக்கு விவகாரம் - நாளை சுஷ்மா சுவராஜுடன் மீனவப் பிரதிநிதிகள் சந்திப்பு
சென்னை: இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதற்காக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை நாளை தமிழக மீனவப் பிரநிதிகள் டெல்லியில் சந்திக்கின்றனர்.
போதைப்பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், ராமேசுவரத்தைச் சேர்ந்த எமர்சன், லாங்லெட், பிரசாத், அகஸ்டஸ், வில்சன் ஆகியோருக்கு கடந்த அக்டோபர் 30 அன்று இலங்கை உயர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது.
இந்தத் தீர்ப்பை கண்டித்து தமிழக முழுவதும் மீனவ அமைப்புகள் உள்பட் பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்தினர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தின் வாயிலாக இலங்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்நிலையில் மீனவர்களின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யவும், மீனவர்களை மீட்டு தாயகம் அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை தேசிய மீனவர் பேரவையின் தலைவர் இளங்கோ தலைமையில் அருளானந்தம், ராமகிருஷ்ணன், தேவதாஸ், சேசு உள்ளிட்ட தமிழக மீனவப் பிரநிதிகள் நாளை (செவ்வாய்கிழமை) சந்திக்கின்றனர்.
இது தொடர்பாக பொன் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :
தமிழக மீனவர்களின் பிரச்சனைகள் குறித்து ஆலோசிப்பதற்காக 05.08.2014 அன்று தமிழக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சிலரும் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சிலரும் 05.08.2014 அன்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களை டெல்லியில் சந்தித்து பேசினோம். இப்பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. மிகவும் பயனுள்ளதாகவும் அமைந்தது.
சுஷ்மா சுவராஜ் வழிகாட்டுதலின் அடிப்படையில் தமிழகத்தைச் சேர்ந்த மீனவ சமுதாய தலைவர்களுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களின் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு குறித்து ஆராயப்பட்டது.
மேலும் கிழக்கு கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ கிராம மக்களைச் சந்தித்து ஆலோசனை பெறுவதற்கு மாநிலப் பொதுச் செயலாளர் சரவணப்பெருமாள் தலைமையில் மாநிலத் துணைத் தலைவர்கள் சுப.நாகராஜன், குப்புராமு ஆகியோரும், மாநிலச் செயலாளர் ஆதவன் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அக்குழுவினர் கிராமம் கிராமமாக ஆலோசனை பெற்று நிரந்தரத் தீர்வு காண பரிந்துரைத்துள்ளனர்.
இதன் அடிப்படையில், சிறையில் அடைக்கப்பட்டிருக்கிற மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடமும், சுஷ்மா சுவராஜிடமும் கலந்து ஆலோசித்துள்ளேன்.
மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்து எங்களது கருத்துக்களை தெரிவிக்கவும், மீனவ சமுதாயத்தின் தலைவர்களோடு, மத்திய அரசுத் தரப்பில் பேச்சுவார்ததை நடத்தும் சுஷ்மா சுவராஜ் அவர்களை சந்திக்க நேரம் ஒதுக்கித் தர கேட்டேன். அதன்பபடி நாளை 18.11.2014 அன்று மீனவ பிரதநிதிகளை சந்திக்க நேரம் ஒதுக்கித் தந்துள்ளார் சுஷ்மா சுவராஜ்.
நாளை நடைபேறும் இப்பேச்சுவார்த்தையில் தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த 15 மீனவ பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். மேலும் என்னோடு, தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், அமைப்பு பொதுச் செயலாளர் மோகன்ராஜுலு, மாநில பொதுச் செயலாளர் சரவணப்பெருமாள், மாநிலத் துணைத் தலைவர்கள் நாகராஜன், குப்புராமு ஆகியோரும், செயலாளர் ஆதவன் ஆகியோரும் வருகை தந்து கலந்து கொள்கின்றனர் என்று கூறியுள்ளார் பொன். ராதாகிருஷ்ணன்.