'சுவாதி கொலை வழக்கு' படத்தை சுவாதி பெற்றோருக்கு போட்டு காட்ட ரெடி.. லாபத்திலும் பங்கு: இயக்குனர்!
சமூக நோக்கத்துடனே சுவாதி கொலை வழக்கு திரைப்படமாக்கப்படுவதாக இயக்குனர் ரமேஷ் செல்வன் தெரிவித்துள்ளார்.
சென்னை : சுவாதி கொலை வழக்கு படத்தில் சுவாதியை தவறாக சித்தரிக்கவில்லை என்று இயக்குனர் ரமேஷ் செல்வன் விளக்கமளித்துள்ளார்.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த பெண் மென்பொறியாளர் சுவாதி 2016ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலைசெய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த கொலை வழக்கு சம்பவம் வேலைக்கு சென்று வரும் பெண்களின் பாதுகாப்பிற்கான கேள்வியை எழுப்பியது.
சுவாதி கொலை வழக்கில், திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் குற்றவாளி என்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். கழுத்தறுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிகிச்சைக்குப் பிறகு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
பரபரப்பான கொலை வழக்கு
ஆனால் சிறையிலிருந்த ராம்குமார், அங்கிருந்த மின்சார வயரைக் கடித்து கடந்த நவம்பர் மாதம் தற்கொலை செய்துகொண்டார். சுவாதி கொலையைப் போலவே ராம்குமார் தற்கொலையும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் அனைவர் மத்தியிலும் பேசப்பட்டது.
திரைப்படத்தால் சர்ச்சை
இந்நிலையில், இயக்குநர் ரமேஷ் செல்வன் என்பவர், 'சுவாதி கொலை வழக்கு' என்ற பெயரில் திரைப்படம் எடுத்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்டர்கள், தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தந்தை புகார்
'சுவாதி கொலை வழக்கு' படத்துக்குத் தடை விதிக்கக்கோரி, சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன், டிஜிபி-யிடம் நேற்று புகார் மனு அளித்துதார். இதனையடுத்து படம் குறித்து சென்னையில் இயக்குனர் ரமேஷ் செல்வன் விளக்கமளித்துள்ளார்.
சமூக நலன்
"இந்த திரைப்படத்தில் சுவாதியை தவறாக சித்தரிக்கவில்லை. அதே போன்று ராம்குமாரை குற்றவாளியாக காட்டியும் படம் எடுக்கப்படவில்லை, சமூக நலனை மையமாக வைத்தே சுவாதி கொலை வழக்கு திரைப்படமாக்கப்பட்டுள்ளது".
லாபத்தில் பங்கு
சுவாதி கொலை வழக்கு படத்தை அவர்களின் பெற்றோருக்கு திரையிட்டு காட்டத் தயார். மேலும் படம் திரையிடப்படுவதன் மூலம் வரும் லாபத்தை சுவாதி மற்றும் ராம்குமார் குடும்பத்தினருக்குத் தரத் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.