திருவையாறு காவிரி கரையில்.. டிரம்ஸ் ஒலிக்க.. பாட்டு பாடி வழிபட்ட டி.ராஜேந்தர்!
காவிரியை வரவேற்று டி.ஆர். பொங்கல் வைத்து வழிபட்டார்.
Recommended Video
தஞ்சை: நவரசங்களின் ஒட்டுமொத்த உணர்ச்சி குவியல்தான். டி.ராஜேந்தர்.
பன்முக படைப்பாளி. தஞ்சை மண்ணை சொந்தமாக கொண்டவர். இவரது நிறைய பாடல்களில் தன் மண்ணின் காதலை வைத்து பாடல்களை அள்ளி கொடுத்திருப்பார் டி.ஆர்.
தன் முதல் படமான ஒருதலைராகம் படத்தில் 'கூடையிலே கருவாடு' பாட்டிலேயும் தன் காவிரியை நுழைத்துக் கொண்டார். "ஆயிரத்தில் நீயே ஒண்ணு, நானறிஞ்ச நல்ல பொண்ணு.. மாயூரத்து காளை ஒண்ணு, பாடுதடி மயங்கி நின்னு... ஓடாதடி காவேரி... உன் மனசில் யாரோடி" என்றார்.
காவிரி தாயே.. காவிரி தாயே
காவிரி ஆற்றின் மீதுள்ள மையலை, பல பாடல் வரிகளில் காட்டினார். இப்போது சமீபத்தில் ஏப்ரல் 9-ம் தேதி கூட, காவிரி நீர் திறந்துவிட வேண்டும் என்று திருவையாறு காவிரி கரைக்கே ஆதரவாளர்களுடன் வந்துவிட்டார் தனது டி.ஆர். அப்போது, தாயே தாயே.. காவிரி தாயே தாயே.. தண்ணீரை தாயேன் தாயேன்... என மனமுருகி வேண்டி, அங்கேயே விளக்கு ஒன்றையும் ஏற்றி வழிபாடும் நடத்திவிட்டு சென்றார்.
மீண்டும் திருவையாறு
இந்நிலையில் தற்போது திருவையாறு கரையில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. தண்ணீர் வேண்டும் என்று வேண்டுதலை நடத்திவிட்டு சென்ற டி.ஆர்., வெள்ளநீர் ஓடுவதை கண்டு மீண்டும் திருவையாறுக்கு இன்று வந்தார். கூடவே அவரது ஆதரவாளர்களும் வந்தனர்.
ட்ரம்ஸ் வாசித்து பாடினார்
திருவையாறு காவிரிக் கரை புஷ்பமண்ட படித்துறைக்கு வந்த டி.ஆர், படித்துறையிலேயே ஒரு வாழை இலையை விரித்து வைத்தார். அதில் மாவிளக்கில் தீபம் ஏற்றினார். பின்னர் பொங்கல் வைத்து படையல் இட்டு வழிபட்டார். கூடவே அவரது ட்ரேட்மார்க் பாட்டும் ஆரம்பமானது. " தவழ்ந்து தவழ்ந்து வாயேன், தமிழ்நாடு வாழ வாயேன்" என்று பொங்கி வரும் காவிரி நீரை வரவேற்று பாடல் பாடினார். சும்மா பாடவில்லை... ட்ரம்ஸ் இசைத்தபடியே பாடி வணங்கினார்.
கலைஞர் உயிருடன் வந்திருப்பார்
பின்னர், செய்தியாளா்களிடம் பேசிய டி.ராஜேந்தா், சினிமாவில் எந்த ஒரு ஹீரோயினையும் தொட்டுக்கூட நான் நடித்ததில்லை என்றார். மேலும் இனிவரும் காலங்களில் தனது பயணம் ஒரு ஆன்மீகவாதியாக மட்டுமே தொடரும் என்றார். அத்தோடு விட்டாரா டி.ஆர். கூடவே, கலைஞா் மருத்துவமனையில் இருந்துபோது, நான் போய் பாடியிருந்தால் அவா் உயிருடன் வந்திருப்பார்" என்று ஒரே போடாக போட்டார்!