பார்வையற்ற பட்டதாரிகளின் போராட்டம் வாபஸ்: அமைச்சருடன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு
சென்னை: தமிழக அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், பார்வையற்ற பட்டதாரிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது.
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் பணி நியமனம், வேலைக்காக காத்திருக்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையினை 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட 9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சென்னை, திருச்சியில் 10வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

தீக்குளிக்க முயற்சி
இந்த நிலையில் சென்னை தலைமை செயலகம் முன்பு பார்வையற்ற பட்டதாரிகள் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜேம்ஸ், ரகு ஆகிய இரு பட்டதாரிகளும் முதல்வரின் வாகன அணிவகுப்பு வருவதற்கு சற்று முன்னதாக தீக்குளிக்க முயன்றனர்.

தடுத்த போலீசார்
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் விரைந்து வந்து பெட்ரோல், மண்ணெண்ணெய் கேன்களை அப்புறப்படுத்தியதுடன் தீக்குளிக்க முயன்ற இருவர் மீதும் தண்ணீரை ஊற்றினர். இதையடுத்து, இருவரையும் கைது செய்ய முயன்றனர். அப்போது போலீஸாருக்கும் பார்வையற்ற பட்டதாரிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
இந்நிலையில், பார்வையற்ற பட்டதாரிகளுடன் வீரமணி, பழனியப்பன், வளர்மதி ஆகிய மூன்று தமிழக அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

போராட்டம் வாபஸ்
9 கோரிக்கைகளில் பள்ளி, கல்லூரிகளில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவது, வேலையில்லா பார்வையற்ற பட்டதாரிகளுக்கு உதவித்தொகையை அதிகரிப்பது உள்ளிட்ட 4 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர்கள் உறுதி அளித்தனர். இதனால், பார்வையற்ற பட்டதாரிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.












Click it and Unblock the Notifications