கருணாநிதியின் குடும்ப சொத்தா தமிழும், திருவள்ளுவரும்? - பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்
சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்க பாஜக முயற்சி செய்து வருகிறது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர், மதுரையில் இருந்து சென்னை வந்தபோது, விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தமிழகத்தில் மீண்டும் அனுமதிக்க செய்ய, பாரதிய ஜனதா கட்சி முயற்சி செய்து வருகிறது. இதுபற்றி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து வலியுறுத்தினேன். தமிழகத்தை சேர்ந்த மற்றொரு குழுவும் அவரை சந்தித்து வலியுறுத்தி உள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கி அந்த விளையாட்டை மீண்டும் நடத்த அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டு நடைபெறும் என உறுதியாக நம்புகிறோம்.
இலங்கை பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினைகளில் நிரந்தர தீர்வு காண நெல்லை மாவட்டம் உவரி கடலோர கிராமத்தை சேர்ந்தவரும், ‘சாகித்ய அகாடமி' விருது பெற்றவருமான, ஜோடி குரூஸ் ஆய்வு அறிக்கை ஒன்றை தயாரித்து உள்ளார். அதில் பிரச்சினைக்கு தீர்வுகாண கூடிய பல்வேறு கருத்துகள் விரிவாக உள்ளன. வருகிற 19ம் தேதி டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் அந்த அறிக்கை வழங்கப்படும்.
ஆய்வு அறிக்கையை அவர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பார். இலங்கை பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினையில் நிரந்தர தீர்வுகாண பிரதமர் மோடி மிகுந்த ஆர்வமாக உள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியை வளர்த்து கொள்வதற்காகவே திருவள்ளுவர், தமிழ், பாரதியார் பெயர்களை பயன்படுத்துவதாக தி.மு.க. தலைவர் கூறி உள்ளார். தமிழ், திருவள்ளுவர், பாரதியார் ஆகியவை தி.மு.க.வின் சொத்தா? அல்லது கருணாநிதியின் குடும்ப சொத்தா? தமிழ் என சொல்லி கட்சியை வளர்த்தது தி.மு.க.தான். எங்களுக்கு பேச அதிகாரம் இல்லை என கூறக்கூடாது. இவர்கள் என்ன பேசினாலும் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடிக்கும். இவர்களுடைய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வந்து விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.