திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்தில் தமிழில் மந்திரங்கள்! ஹைகோர்ட்டில் தமிழக அரசு உறுதி!
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்தில் தமிழில் மந்திரங்கள் ஓதப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த கோயில் அறுபடை வீடுகளில் 2ஆம் படைவீடாக உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள செந்திலாண்டவர் கோயிலில் வரும் ஜூலை 7ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் அதே மாவட்டம், ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த வியனரசு, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 7ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்தக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தேன். இதுவரை பதில் இல்லை. எனவே திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்தின்போது யாகசாலை, கருவறை, கோபுர விமான பூஜையில் தமிழ் மொழியில் மந்திரங்கள் ஓதி கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி. மரிய கிளாட் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "யாக சாலையில் மந்திரங்கள் ஓதுவது தொடங்கி, திருமுறை பாடுவது, திருப்புகழ் பாடுவது, 64 ஓதுவார்கள் பூஜை செய்வது ஆகிய நிகழ்வுகள் தமிழ் மொழியில் நடைபெறும்" என கூறப்பட்டது.
இதை பதில் மனுவாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம் தொடர்பாக நிலுவையில் இருக்கும் மனுக்களுடன் சேர்த்து ஜூலை 2ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அன்றைய தினம் கும்பாபிஷேக நேரத்தை மாற்றக் கோரி சிவராம சுப்பிரமணிய சாஸ்திரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம் கும்பாபிஷேக நேரத்தை முடிவு செய்ய சபரிமலை மேல் சாந்தி தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது. இதையடுத்து அந்தக் குழு கூடி ஜூலை 7-ல் காலை 6.15 முதல் 6.50 வரை கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தது.
இந்த நேரத்துக்கு குழுவில் இடம் பெற்றிருந்த சிவராம சுப்பிரமணிய சாஸ்திரி ஆட்சேபம் தெரிவித்தார். இருப்பினும் காலை 6.15 முதல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்த இறுதி முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில் கும்பாபிஷேக நேரத்தை மாற்றக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் சிவராம சுப்பிரமணிய சாஸ்திரி சீராய்வு மனு தாக்கல் செய்தார். அதில், "ஜூலை 7ல் நல்ல முகூர்த்த நேரம் என்பது மதியம் 12.05 மணி முதல் 12.47 மணி வரை தான். தோஷங்கள் இல்லாத இந்த நேரத்தில் நேரத்தில் கும்பிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும். அதுவரை கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்க தடை விதிக்க வேண்டும்," எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.ஸ்ரீமதி, ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், "நீதிமன்றம் அமைத்த குழு கும்பாபிஷேக நேரத்தை முடிவு செய்துள்ளது. அந்த நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்தலாம். கோயில் கும்பாபிஷேகத்தை பொறுத்தவரை கோயில் தலைமை குருக்கள் குறிக்கும் நேரம் தான் முக்கியம். இனிவரும் காலங்களில் கோயில் கோயில் தலைமை குருக்கள் குறிப்பிடும் நேரத்தை எழுத்துப் பூர்வமாக பெற்று அந்த நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்," என உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications