மாதொருபாகன்... சர்ச்சையில் சிக்கிய நாவல் தலைப்பில் புதிய தமிழ்ப்படம்!
சென்னை: கடும் சர்ச்சையில் சிக்கிய நாவலான மாதொருபாகன் என்ற பெயரில் புதிய தமிழ்ப்படம் ஒன்று உருவாக உள்ளது.
தனது மாதொருபாகன் நாவல் மூலம் பெரும் பிரச்சினைகளைச் சந்தித்தார் எழுத்தாளர் பெருமாள் முருகன். திருச்செங்கோடு பகுதி பெண்களை கீழ்த்தரமாக சித்தரித்திருப்பதாக எதிர்ப்பு கிளம்ப, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய பெருமாள் முருகன், நான் இறந்து விட்டேன். இனி எழுதவே போவதில்லை என அதிரடியாக அறிவித்தார்.
எழுத்தாளனின் கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவதா என பெருமாள்முருகனுக்கு ஆதரவாக பலர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

அந்த பரபரப்பு ஓய்வதற்கு முன்னதாகவே, மாதொருபாகன் என்ற பெயரை படத்தலைப்பாக்கியுள்ளனர்.
நவீன கூத்துப்பட்டறை சார்பில், ஆதிரா பாண்டிலட்சுமி என்பவர் இப்படத்தை இயக்குகிறார். திருச்சி வேலுச்சாமி கதை, வசனம் எழுத, இப்படத்திற்கு இசை வல்லம் அலீம். அண்ணாமலை ராஜா ஒளிப்பதிவு.
பெயர் மட்டும் தான் நாவலுடையது என்றும், படக்கதை நாவலைத் தழுவியது அல்ல என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு சிவபக்தையின் கதையாம். ஆணுக்குச் சமமான அத்தனை உரிமைகளும் பெண்களுக்கும் அளிக்கப் பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் கதைக்களமாம்.
நாவலின் பெயரை தங்கள் படத்துக்கு தலைப்பாக வைப்பது குறித்து பெருமாள் முருகனிடம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அனுமதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான நடவடிக்கைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications