சட்டசபையில் இன்று வனம், சுற்றுச்சூழல் துறை மானியக்கோரிக்கை... ஜெ.எடப்பாடி படம் போட்ட துணிபை ரெடி
தமிழக சட்டசபையில் இன்று வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.
சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. முதல் நாளில் கேள்வி நேரத்துக்கு பின்னர் வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது.
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் 16-ஆம் தேதி நடைபெற்றது. அன்று நிதி அமைச்சர் ஜெயகுமார் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் முடிந்ததும், பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி சட்டசபையை எத்தனை நாள் நடத்துவது என்று முடிவு செய்தனர். 2017-18-ஆம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கைகளும் 2016-17-ம் ஆண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கையும் மார்ச் 23-ம் தேதி தாக்கல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதங்கள் நடத்தப்படாமலேயே கூட்டத் தொடரை முடித்து விட்டதால் மீண்டும் சட்டசபையை கூட்ட வேண்டும் என்று திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் சட்டசபையை மீண்டும் இன்று கூட்ட ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூடுயதும், கேள்வி நேரம் நடைபெறும். கேள்வி நேரத்துக்குப் பிறகு வனம் மற்றும் சுற்றுசூழல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் இதில் தங்களது கருத்துக்களை தெரிவிப்பார்கள்.
இதைத்தொடர்ந்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கருப்பணன் ஆகியோர் பதில்களை அளித்து துறை வாரியாக புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.
இந்நிலையில் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, காகித மற்றும் துணி பைகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதுகுறித்து முக்கிய அறிவிப்புகள் ஏதேனும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி படம் போட்ட துணி பைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அந்த பைகள் சட்டசபை வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.