தமிழக வாகனங்களுக்கு அனுமதி மறுப்பதா? எருமேலியில் திண்டுக்கல் ஐயப்ப பக்தர்கள் திடீர் சாலை மறியல்!
எருமேலி: தமிழ்நாட்டு வாகனங்களுக்கு கேரளாவில் அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டி தமிழ்நாட்டின் திண்டுக்கல்லை சேர்ந்த பக்தர்கள் எருமேலியில் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரளாவின் சபரிமலைக்கு மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காக லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் சென்று திரும்புகின்றனர். கடந்த காலங்களை விட நடப்பாண்டில் சபரிமலைக்கான ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஒவ்வொரு நாளும் சராசரியாக 80,000 முதல் 90,000 பக்தர்கள் சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

அதே நேரத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உரிய வசதிகளை கேரளா மாநில அரசு செய்து தரவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. கேரளா அரசைக் கண்டித்தும் அம்மாநில அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தின. கேரளா உயர்நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் தலையிட்டு உத்தரவுகளைப் பிறப்பித்தது.
இந்த நிலையில் சபரிமலைக்கு செல்லும் வழியில் எருமேலியில் இன்று தமிழ்நாட்டை சேர்ந்த பக்தர்கள் திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே எ.பண்ணைப்பட்டியைச் சேர்ந்த பக்தர்கள் சென்ற வாகனத்தை எருமேலியில் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து எருமேலியில் கேரளா அரசு பேருந்தை வழிமறித்து தமிழக பக்தர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். ஐயப்பனின் சரண கோஷங்களையே முழக்கமாக எழுப்பி இந்தப் போராட்டத்தை ஐயப்ப பக்தர்கள் நடத்தினர்.












Click it and Unblock the Notifications