எனக்கு சீட் தராமல் கள்ளாட்டம் ஆடி விட்டனர்.. விஜயதாரணி புலம்பல்
சென்னை: லோக்சபா தேர்தலில் தனக்கு சீட் தராமல் காங்கிரஸ் கட்சியில் உள்குத்து நடத்தி விட்டனர். கன்னியாகுமரி தொகுதியை எனக்கு காங்கிரஸ் ஒதுக்கும் என்ற நம்பிக்கை இன்னும் எனக்கு உள்ளது என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி தெரிவித்துள்ளார்.
இந்தத் தொகுதியை ஏற்கனவே குமரி அனந்தன் தம்பி வசந்தகுமாருக்கு காங்கிரஸ் ஒதுக்கியுள்ளது. ஆனால் இத்தொகுதியை விஜயதாரணி கேட்டு வந்தார்.
ஆனால் அவருக்கு சீட் தரப்படவில்லை. இதனால் பெரும் ஏமாற்றமடைந்துள்ளார் விஜயதாரணி.
நிறைய செய்திருந்தேன்
இதகுறித்து விஜயதாரணி கூறுகையில், நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். இந்தத் தொகுதிக்காக நான் நிறைய செய்துள்ளேன். இந்தத் தொகுதி எனக்கே கிடைக்கும் என்று நம்பியிருந்தேன்.
வெறும் 5 சதவீதம் மட்டுமே
பெண் வேட்பாளர்களுக்கு 50 சதவீத டிக்கெட் தர வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியிருந்தார். ஆனால், தமிழகத்தில் 2 பெண்களுக்கு மட்டுமே அதாவது 5 சதவீதமே வாய்ப்பு தரப்படடுள்ளது.
ஜோதிமணியும், சாருபாலாவும்
தமிழகத்தில் கரூரில் ஜோதிமணியும், திருச்சியில் சாருபாலா தொண்டைமானும் மட்டுமே பெண் வேட்பாளர்களாக உள்ளனர்.
படித்தவர்கள் நிறைந்த தொகுதி
கன்னியாகுமரி படித்தவர்கள் நிறைந்த தொகுதி. அங்கு 93.5 சதவீத கல்வியறிவு உள்ளது. மக்கள் சமூக சேவையின் பால் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். ஒரு பெண் வேட்பாளருக்காக அவர்கள் காத்திருந்தனர்.
சரியான தேர்வாக இருந்திருப்பேன்
நான்தான் சரியான தேர்வாக இருந்திருப்பேன். அங்குள்ள இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களிடையே எனக்கு நல்ல ஆதரவு உள்ளது. ஆனால் எனக்கு சீட் தரவில்லை.
நிரூபித்தவள்
விளவங்கோடு தொகுதியில் கடந்த 2011ல் நடந்த தேர்தலில் நான் வெற்றி பெற்று என்னால் குமரி மாவட்டத்தில் எங்கும் வெல்ல முடியும் என்பதை நிரூபித்தவள் என்றார் விஜயதாரணி.
கவிமணியின் கொள்ளுப் பேத்தி
விஜயதாரணி, சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவராக இருக்கிறார். இவர் மறைந்த கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையின் கொள்ளுப் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.