‛விவசாயிகளுக்கு குட்நியூஸ்’.. வைகை, பவானிசாகர் அணையில் பாசனத்துக்கு நீர்திறப்பு.. எப்போது தெரியுமா?
சென்னை: சுமார் 18 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் தேனி மாவட்டம் வைகை அணையில் நாளை முதலும், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து வரும் 25ம் தேதி முதலும் தண்ணீர் திறக்க நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 3 மற்றும் 4ம் தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. தற்போது தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மழை வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

இதுதவிர இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை என்பது பொதுவாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில் நடவு பணிகளை தொடங்கி உள்ளனர். மேலும் மாநிலத்தில் உள்ள பல்வேறு அணைகள் நிரம்பி உள்ளன.
தேனி மாவட்டம் வைகை அணை மற்றும் ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையும் நிரம்பி உள்ளது. இந்நிலையில் தான் அந்த அணைகளில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விட தமிழக நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி வைகை அணையில் நாளை தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛58 கிராமங்கள் திட்ட கால்வாய்க்கு 300 மில்லியன் கனஅடி தண்ணீரினை டிசம்பர் 23ம் தேதி முதல் திறக்க வேண்டும். நாளொன்றுக்கு 150 கனஅடி வீதம் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தினை பொறுத்து வைகை அணையில் இருந்து திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன்மூலம் மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 2,284.86 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்’’ என கூறப்பட்டுள்ளது.
அதேபோல் ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்காலில் உள்ள பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் டிசம்பர் 25ம் தேதி முதல் ஏப்ரல் 23ம் தேதி வரை தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
முதல் 30 நாட்களுக்கு நாளொன்றுக்கு வினாடிக்கு 150 கனஅடி வீதமும், அது்த 60 நாட்களுக்கு நாளொன்றுக்கு வினாடிக்கு 450 கனஅடி வீதமும் மற்றும் மீதமுள்ள 30 நாட்களுக்கு நாளொன்றுக்கு வினாடிக்கு 500 கனஅடி வீதமும் மொத்தம் 120 நாட்களுக்கு இரண்டாம் பருவ பாசனத்துக்கு 4,017.60 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டம் பவானி, மொடக்குறிச்சி மற்றும் கொடிமுடி ஆகிய வட்டங்களிலுள்ள 5,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications