தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ் பதவியேற்பு- ஜெயலலிதா வாழ்த்து #tngovernor
சென்னை: தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.வித்யாசாகர் ராவ் பதவியேற்றார். அவருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய ஆளுநருக்கு முதல்வர் ஜெயலலிதா மலர்கொத்து கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான கே.ரோசய்யா, கடந்த 2011 ஆகஸ்ட் 31ம் தேதி தமிழக ஆளுநராக பதவியேற்றார். அவரின் பதவிக்காலம் ஆகஸ்ட் 30ம் தேதியுடன் நிறைவுபெற்றது. ஆனாலும், புதிய ஆளுநர் நியமிக்கப்படாததால் அவருக்கு நீட்டிப்பு வழங்கப்படும் என செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், தமிழக ஆளுநர் பொறுப்பு, மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. ஆளுநராக பதவியேற்பதற்காக வித்யாசாகர் ராவ் இன்று காலை சென்னை வந்துள்ளார். அரசு முறைப்படி அவருக்கு சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஜெயலலிதா வரவேற்பு அளித்தார். அவருடன் தலைமைச் செயலர் ராமமோகன் ராவ், டிஜிபி அசோக்குமார் ஆகியோர் உடனிருந்து வரவேற்பு அளித்தனர்.
மாலை 4.30 மணியளவில் ராஜ்பவனில் எளிமையாக நடைபெற்ற விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. கவுல் வித்யாசாகர் ராவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று ஆளுநருக்கு மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
- 74 வயதான வித்யாசாகர் ராவ், 1942 பிப்ரவரி 12ம் தேதி தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் பிறந்தார். வினோதா என்ற மனைவியும், இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
- வழக்கறிஞரான ராவ், சிறுவயதில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டார். பின்னர் ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவான அகிலபாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பில் பணியாற்றினார்.
- சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றிய வித்யாசாகர் ராவ், 1972ல் கரீம்நகர் மாவட்ட ஜனசங்கத்தின் தலைவராக இருந்தார்.
- மெட்பள்ளி சட்டமன்றத் தொகுதியில் இருந்து பாஜக சார்பில் ஆந்திர சட்டப்பேரவைக்கு 1985ல் தேர்வு செய்யப்பட்டார்.
- 1998ல் கரீம் நகர் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1998ல் ஆந்திரப் பிரேதச பாஜக தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
- கடந்த 1999ம் ஆண்டு, வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் உள்துறை இணை அமைச்சராக பொறுப்பேற்று தேசிய அரசியலில் அறிமுகமானார். பின்னர், அதே ஆண்டில் இலாகா மாற்றப்பட்டு வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராக பணியாற்றினார்.
- 2014 ஆகஸ்ட் மாதம், வித்யாசாகர் ராவ் மகாராஷ்டிர மாநில அளுநராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.
தற்போது, தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்றுள்ளார்.