இவ்வளவு இணக்கமா இருந்தும் தமிழக விவசாயிகளை இப்படி கைவிட்டுடுச்சே மத்திய அரசு!
அதிமுக அரசு இணக்கமாக இருந்தபோதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு வஞ்சித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை: அதிமுக அரசு இணக்கமாக இருந்தபோதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு வஞ்சித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு மத்திய அரசுடன் அதிக நெருக்கம் காட்டி வந்தது.
சசிகலா முதல்வராக ஆசைப்பட்டு பெரும் நெருக்கடி ஏற்பட்ட போதும், ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிகள் பிரிந்து கிடந்த போதும் டெல்லி மேலிடம் தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு கண்டது.
ஆறுதலாக இருந்த அரசு
சசிகலா குடும்பத்திடம் இருந்து ஆட்சியையும் கட்சியையும் காப்பாற்றிக்கொள்ளவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு பெரும் ஆறுதலாக மத்திய அரசு இருந்தது.
கண்டும் காணாமல்
எந்த விவகாரத்திலும் தமிழக அரசு பாஜகவை எதிர்த்ததில்லை. தமிழக பாஜக நிர்வாகிகள் தமிழக அரசை கடுமையாக விமர்சித்த போதும் கூட தமிழக அரசு அதனை கண்டும் காணாமலும்தான் இருந்தது.
விமர்சனம்
இதனை பாஜகவின் பினாமி அரசு என்றும் தமிழகத்தில் பாஜகவின் மறைமுக ஆட்சி நடைபெறுவதாகவும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. அப்போதெல்லாம் கொஞ்சமும் அசராமல் தமிழகத்துக்கான நலத்திட்டங்கள் கிடைக்க தமிழக மக்களின் நலனுக்காக மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருப்பதாக முதல்வரும் துணை முதல்வரும் விளக்கமளித்து வந்தனர்.
நீட்டுக்கு எதிர்ப்பு
ஆனால் கடந்த ஆண்டு நீட் விவகாரத்தில் தமிழகத்துக்கு விளக்களிக்க வேண்டும் என தமிழகத்தில் அத்தனை போராட்டங்கள் நடைபெற்றது. தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் குரல் கொடுத்தனர்.
தகர்ந்த கனவு
ஆனால் மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை. நீட் தேர்வை நடைமுறைப்படுத்தி தமிழகத்தை வஞ்சித்தது. இதனால் மருத்துவ கனவில் இருந்த ஏராளமான மாணவர்களின் கனவு கோட்டை தகர்ந்தது.
ஏறெடுத்து பார்க்கவில்லை
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் இந்த மத்திய அரசு போதுமான நிதியை கொடுக்கவில்லை. அதேபோல் வர்தா புயல், ஓகி புயல் என எதற்கும் தமிழகத்தை ஏறெடுத்துக்கூட பார்க்கவில்லை மத்திய அரசு.
நிதர்சனம்
இந்நிலையில் காவிரி விவகாரத்திலும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சித்து விவசாயிகளை ஏமாற்றியுள்ளது. தமிழக நலனுக்காக மத்திய அரசு இவ்வளவு இணக்கமாக இருந்தும் ஒரு நன்மை கூட இதுவரை மத்திய அரசால் தமிழகத்துக்கு ஏற்படவில்லை என்பதே நிதர்சனம்.