சகாயம் குழு விவகாரத்தில் ஷீலா பாலகிருஷ்ணனுடன் மோகன் வர்கீஸ் மோதல்?- அதனால் டிரான்ஸ்பர்?
சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த மோகன் வர்கீஸ் சுங்கத் திடீரென டம்மி பதவிக்கு தூக்கி அடிக்கப்பட்டதன் பின்னணியில் கிரானைட் மற்றும் கனிம மணல் கொள்ளை விவகாரம்தான் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2011ஆம் ஆண்டு அதிமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து தற்போது 5வது தலைமைச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற போது மாலதி, தலைமைச் செயலாளராக இருந்தார். அவர் விருப்ப ஓய்வு பெற்ற பின்னர் தேபேந்திரநாத் சாரங்கி தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அவரைத் தொடர்ந்து ஷீலா பாலகிருஷ்ணன் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார். ஷீலா பாலகிருஷ்ணன் ஓய்வைத் தொடர்ந்து மோகன் வர்கீஸ் சுங்கத் தலைமைச் செயலாளரானார். ஆனாலும் ஷீலா பாலகிருஷ்ணன் தமிழக அரசின் ஆலோசகர் என்ற பொறுப்பில் அமர வைக்கப்பட தலைமைச் செயலாளர் என்ற பதவி டம்மியானது.
இதனால் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்த மோகன் வர்கீஸ் சுங்கத் சுதந்திரமாக எந்த ஒரு முடிவையும் எடுக்காத நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார் என்கின்றன தலைமைச் செயலக வட்டாரங்கள். குறிப்பாக கிரானைட் மற்றும் கனிம மணல் கொள்ளை விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செயல்படும் நிலைக்கு மோகன் வர்கீஸ் சுங்கத் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டார் என்பதுதான் அவர் டம்மி பதவிக்கு தூக்கியடிக்கப்பட்டதன் பின்னணி என்று கூறப்படுகிறது.
அதாவது கிரானைட் மற்றும் கனிம மணல் கொள்ளை குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையிலான குழு விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு முட்டுக்கட்டை போடும் வகையிலான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மோகன் வர்கீஸ் சுங்கத்தை 'மக்களின் தலைமை செயலாளர்" மூலமாக மேலிடம் நெருக்கியதாக கூறப்படுகிறது.
ஆனால் நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராக செயல்படப் போய் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை எதிர்கொள்ள நேரிடுமே என்று மோகன் வர்கீஸ் சுங்கத் ஆட்சேபனை தெரிவித்திருக்கிறார். இந்த ஆட்சேபனையும் எதிர்ப்பும்தான் பெரிய அளவில் கருத்து வேறுபாடாக வெடித்திருக்கிறது. இருப்பினும் மோகன் வர்கீஸ் சுங்கத்தின் விருப்பமின்றியே இந்த விவகாரத்தில் 'மக்களின் தலைமை செயலாளர்' ஷீலா பாலகிருஷ்ணன் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்தே திடீரென மோகன் வர்கீஸ் சுங்கத் தற்போது டம்மி பதவியாக தமிழக அரசின் ஐ.ஏ.எஸ். அகாடமிக்கு மாற்றப்பட்டிருக்கிறார் என்கின்றன தலைமைச் செயலக வட்டாரங்கள்.
மேலும் இன்னும் 3 மாதங்களில் ஓய்வு பெற உள்ள நிலையில் மோகன் வர்கீஸ் சுங்கத் திடீரென டம்மி பதவிக்கு தூக்கியடிக்கப்பட்டிருப்பதால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிர்ச்சியடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.