சமையல் பாத்திரத்துடன் கலெக்டர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டத்தில் குதித்த அரசு ஊழியர்கள்!
நீதிமன்ற உத்தரவை மீறி தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம்: அரசு நோட்டீஸ் அளித்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 7ஆவது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த 7ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திங்கட்கிழமை முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்திவருகின்றனர். இன்று ராமநாதபுரத்தில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்

பாத்திரங்களுடன் போராட்டம்
சமையல் பாத்திரங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறிய அரசு ஊழியர்கள் ஆயிரகணக்கானோர் சமைத்து சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தீர்வு கிடைக்கும் வரை விடமாட்டோம்
அரசின் உருட்டல் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம் என்று கூறியுள்ள அரசு ஊழியர்கள் எங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை தொடருவோம் என்று கூறினர். பிரதமர், முதல்வர், அரசியல்வாதிகளுக்கு பென்சன் இருக்கும் போது அரசு ஊழியர்களுக்கு பென்சன் வேண்டாமா என்று கேள்வி எழுப்பினர்.

திருச்சியில் தள்ளுமுள்ளு
திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் அவர்களைத் தடுத்து நிறுத்தும் போது போலீசாருக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஜாக்டோ ஜியோ அமைப்பினரை போலீசார் உள்ளே அனுமதிக்காததால் ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்போது தர்ணாவில் ஈடுபட்டனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் சமையல்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கேயே சமைத்து சாப்பிட்டு போராட்டம் செய்து வருகின்றனர்.

தொடர் போராட்டம்
திருவள்ளூரில் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியா கூட்டமைப்பினர், கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்கங்களை எழுப்பினர். விழுப்புரத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பும் புதிய பேருந்து நிலையம் முன்பும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அரசுக்கு எதிராக முழக்கம்
கடலூரில் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். இதேபோல், கரூர், திருவண்ணாமலை, மதுரை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications