அமைதிப்பூங்காவா? ரத்தபூமியா?: தமிழகத்தில் ஒரே நாளில் 10 கொலைகள்- பீதி
சென்னை: தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது.... பாலாறும் தேனாறும் ஓடுகிறது என்று ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள் கூறினாலும் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. ஜூலை 11ம் தேதியன்று தமிழகத்தில் பல பகுதிகளில் 10 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது.
சுவாதி கொலை, வினுப்பிரியா தற்கொலை, மேட்டூர் அருகே சிறுமியை பிளேடால் அறுத்து கொன்று அண்டாவிற்குள் அடைத்து வைத்த கொடூரங்கள் இன்னும் கண்ணை விட்டு மறையவில்லை, மனதை விட்டு அகலவில்லை. அதற்குள் மானாமதுரை அருகே கணபதியேந்தல் கிராமத்தில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவி காளீஸ்வரி, கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியலைகளை உருவாக்கியுள்ளது.
காளீஸ்வரி தனது மரணத்திற்கும் முன்னர், எங்கே இருக்கிறேன் என்றே தெரியலைம்மா என செல்போனில் அவரது தாய் ஜெயாவிடம் கதறி அழுதவாறே உயிரை விட்டுள்ளது இப்போது தெரியவந்துள்ளது. அண்ணன் முறையுள்ள உறவினரே சிறுமி காளீஸ்வரியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளார்.
மாணவி காளீஸ்வரியின் வீட்டிற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சாந்தி, துணைத்தலைவர் மணியம்மா உள்ளிட்டோர் நேற்று சென்றனர். காளீஸ்வரியின் தாய் ஜெயாவிற்கு ஆறுதல் கூறிவிட்டு நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டனர்.
அப்போது பேசிய ஜெயா, எனது மகள் காளீஸ்வரி கடந்த திங்கட்கிழமையன்று (ஜூலை 11) பள்ளிக்கு சென்றாள். பின்னர் வீடு திரும்புவதற்காக தோழிகளை எதிர்பார்த்து இருந்திருக்கிறாள். அப்போது கார்த்திக் பைக்கில் வருமாறு கூப்பிட்டுள்ளான்.
கணபதியேந்தல் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் என்கிற மாணவனும் பைக்கில் உடன் வருவதாக கேட்டுள்ளான். ஆனால், அவனை பைக்கில் ஏற்ற கார்த்திக் மறுத்துவிட்டான். அவன்தான், எனது மகளை கார்த்திக் பைக்கில் கூட்டிச் சென்ற விவரத்தை தெரிவித்தான்.
உடனே கார்த்திக்கு போன் செய்தேன். காளீஸ்வரியுடன், நண்பர் வீட்டில் இருப்பதாக சொன்னான். மூன்று முறை பேசிய போதும் இதே பதிலைத்தான் சொன்னான். நான்காவது முறையாக சத்தமாக கேட்டபோது, வீட்டில் இருப்பதாக சொன்னான்.
காளீஸ்வரியிடம் போனை கொடுக்க சொன்னேன். அவளிடம் கேட்டபோது, எங்கே இருக்கிறேன் என்றே தெரியலம்மா என முதலில் கூறினாள். சிறிதுநேர மவுனத்திற்கு பிறகு, நண்பர் வீட்டில் இருக்கிறோம் என்றாள்.
இருட்டி விட்டதால் 5வது முறையாக கார்த்திக்கிடம் பேசியபோது, சித்தி என்னை மன்னிச்சிடு. காளீஸ்வரியை கொலை செய்துவிட்டேன் என்று சொல்லிவிட்டு செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டான். இதனால் பதற்றம் ஏற்பட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் கதறி அழுதபடி அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார், கிராம மக்கள் டார்ச்லைட் விளக்குகளோடு எங்கள் பகுதி முழுவதும் தேடினர். கழுத்தறுபட்ட நிலையில் கிடந்த கார்த்திக்கை இரவு 8.30 மணியளவில் கண்டுபிடித்தனர்.
அப்போது ஊர்க்காரர்கள், காளீஸ்வரி எங்கே? எனக் கேட்டதற்கு, பத்திரமாக உயிரோடு இருக்கிறாள். என்னை காப்பாற்றினால்தான், காளீஸ்வரி எங்கேயிருக்கிறாள் என்று சொல்வேன் என்றதும் போலீசார் மானாமதுரைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் சேர்த்த பின்பு காளீஸ்வரியை கொலை செய்துவிட்டதாக தெரிவித்தான். அதன்பின் போலீசாரும், கிராமத்தினரும் இரவு முழுவதும் தேடி மறுநாள் அதிகாலையில் எனது மகளை பிணமாக கண்டெடுத்தனர் என்று கண்ணீர் மல்க நடந்த விசயங்களை மாதர் சங்கத்தினரிடம் தெரிவித்தார்.
காளீஸ்வரி சடலமாக கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து ஒட்டுவதற்கு பயன்படுத்தப்படும் செல்லோ டேப், நூல் கயிறு, குளிர்பான பாட்டில், மது பாட்டில், பிஸ்கெட் பாக்கெட் கவர் ஆகியவற்றை போலீசார் நேற்று எடுத்துள்ளனர். இதனால் காளீஸ்வரியை கொலை செய்யவேண்டும் என்று கார்த்திக் முன்கூட்டியே திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
கொலை நடந்த இடத்தில் இருந்த ரத்த மாதிரிகள், கணபதியேந்தல் கண்மாயில் நிறுத்தப்பட்டிருந்த பைக், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற கார்த்திக் கிடந்த இடத்தில் எடுக்கப்பட்ட ரத்தம் தோய்ந்த கத்தி, செல்போன் உள்ளிட்டவற்றை போலீசார் சேகரித்துள்ளனர். தமிழகம் முழுவதும் 12ம் தேதி மட்டும் பத்து கொலைகள் நடந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
•ஈக்காடுதாங்கல் பகுதியில் அடையாறு ஆற்றில் கழுத்து அறுபட்ட நிலையில் அழுகிய நிலையில் ஆண் சடலடத்தை காவல்துறையினர் கண்டெடுத்தனர். அவர் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து கிண்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
•நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகே அதிமுக கிளைச் செயலாளர் பாலசுப்பிரமணியனும் அவரது தம்பி மாரியப்பனும் பேருந்தில் வைத்து மர்மநபர்களால் அரிவாளால் சரமாரியாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.
• கடந்தாண்டு கண்ணப்பன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். அது தொடர்பான வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த சகோதரர்கள் இருவரும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகிவிட்டு திரும்பும்போது கொலை செய்யப்பட்டுள்ளனர்.
•தேவகோட்டை அருகே கீழவயலை சேர்ந்தவர் கிருஷ்ணன் தச்சவயல் அருகே தலையில் அடிபட்டு இறந்து கிடந்திருக்கிறார். அவரை யாரோ படுகொலை செய்துள்ளதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
•தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே ரமேஷ் என்பவர் அவரது மனைவி பஞ்சவர்ணத்திடம் அடிக்கடி தகராறு செய்ததால் மனைவியின் உறவினர்களாலேயே கொலை செய்யப்பட்டுள்ளார்.
•மதுரை, வாடிப்பட்டியில் பட்டாசு கடை ஒன்றின் பின் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில் கொல்லப்பட்ட அந்த நபர் மதுரை கோ.புதூர் மண்மலைமேடு பகுதியைச் சேர்ந்தவர்) என்று தெரியவந்துள்ளது.
•மதுரை சக்கிமங்கலத்தை சேர்ந்த முத்துமாணிக்கம் நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது மர்ம நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்டிருக்கிறார். காதல் விவகாரத்தினால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
•சேலம் மாவட்டம், பள்ளத்தாதனூரை சேர்ந்த மனோஜ்குமார் இருசக்கர வாகனத்தில் வீட்டு திரும்பும்போது எதிரே வந்த கார், மோதிசம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முன்விரோதம் காரணமாக அவரை காரை ஏற்றி கொலை செய்துள்ளதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
•விருதுநகர் மாவட்டம், தாமரைக்குளத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் முத்தையா கடந்த 8ஆம் தேதி காணாமல் போனார். நேற்று, தாமரைக்குளம் அருகே கண்மாய் அருகே முத்தையா பிணமாக கிடந்துள்ளார். அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கூறுகின்றனர்.
•சுவாதி கொலைக்குப்பின்னர் சென்னையில் குறிப்பாக சூளைமேடு பகுதியில் பெண்கள் ஒரு அச்சத்தோடு உலவி வருகிறார்கள். வினுப்பிரியா தற்கொலையின் பின்னர் ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் முகநூல் கணக்கில் இருந்து வெளியேறிவிட்டனர். அமைதிப்பூங்கா என்று அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் தற்போதைய நிலைமை இதுதான். தமிழகம் மெல்ல மெல்ல ரத்த ஆறு ஓடும் பூங்காவாக மாறி வருகிறது என்று எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
• இந்த கொலைகள் எல்லாமே குடும்ப சண்டை, முன்விரோதத்தால் நடந்த கொலை. எனவே இவற்றை முன் கூட்டியே கண்காணித்து தடுப்பது என்பது இயலாத காரியம் என்கிறது போலீஸ். அதுவும் சரிதான், ஆனால் மக்களிடம் பீதி மட்டும் அகலவேயில்லை.