வெளிமாநில தேர்தல் பார்வையாளர்களாக தமிழக அதிகாரிகள் நியமனம்
சென்னை: வெளிமாநில தேர்தல் பார்வையாளர்களாக தமிழக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு டெல்லி தலைமை தேர்தல் அலுவலகமும், தமிழக தலைமை தேர்தல் அலுவலகமும் தேர்தல் வேலைகளை மும்முரமாக தொடங்கிவிட்டன. தேர்தல் பார்வையாளர்களாக வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் தமிழகத்திற்கு வர உள்ளனர்.
இதேபோல, தமிழகத்தில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ் அதிகாரிகள் வெளிமாநிலங்களுக்கு தேர்தல் பார்வையாளர்களாக செல்கிறார்கள். தமிழகத்தில் இருந்து செல்லும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பட்டியலை டெல்லி தலைமை தேர்தல் கமிஷன் கேட்டுள்ளது.
1990 முதல் 1995-ம் ஆண்டு வரை தேர்வுபெற்ற ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பட்டியலை தேர்தல் கமிஷன் கேட்டுள்ளது. அந்த பட்டியல் தயாராகி வருகிறது. பட்டியல் அனுப்பப்பட்டவுடன் டெல்லி தலைமை தேர்தல் கமிஷன் எந்தெந்த அதிகாரியை எந்தெந்த மாநிலத்திற்கு அனுப்புவது என்ற பட்டியலை வெளியிடும். அதன்பிறகு, தமிழகத்தில் இருந்து ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக அனுப்பப்படுவார்கள்.
ஐ.பி.எஸ் அதிகாரிகளை பொறுத்தமட்டில் தமிழகத்தில் இருந்து 15 பேர் வரை பார்வையாளர்களாக செல்வார்கள் என்று தெரியவந்துள்ளது. ஐ.ஜி.க்கள் முனைவர் எம்.ரவி, சங்கர் ஜிவால், ஷீமாஅகர்வால், வன்னியபெருமாள், சொக்கலிங்கம், ரவிக்குமார், பாலநாகதேவி, வினித்வான்கடே மற்றும் டி.ஐ.ஜி. பெரியய்யா ஆகியோர் பட்டியலில் இடம்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.