மழை வரவே இல்லை... சென்னையில் பயங்கர புழுக்கம்... ஆறுதல் தராத கத்திரியின் முதல் நாள்
சென்னை: அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் இன்று தொடங்கி வருகிற 29 ஆம் தேதி வரை 25 நாட்கள் நீடிக்கவுள்ள நிலையில் சென்னையில் காலையிலிருந்தே பயங்கர புழுக்கமாக இருக்கிறது.
இப்படி அதிகமாக "குமுறல்" இருந்தால் மழை வரும் என்பார்கள். அதற்கேற்ப சில இடங்களில் மழையும் சொட்டு வைத்தது. ஆனால் இதுவரை மழை இல்லை.
இதற்கிடையே, அக்னி நட்சத்திரக் கால கட்டத்தில் வெயில் வாட்டி வதைக்கும் என்றாலும் மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கோடை வெயில் அதிகரிக்க தொடங்கும் வேளையில், அதற்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழகம், புதுச்சேரியில் நாளை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ‘‘தென்மேற்கு வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது'' என்றனர்.
இன்று காலை முதலே சென்னையில் வெயில் சற்று மூடி மூடி அடிக்கிறது. அதிக புழுக்கமாக உள்ளது. சில இடங்களில் காற்று வீசுகிறது. மழைதான் எப்போது வரும் என்று தெரியவில்லை.