தமிழக டெல்டா மாவட்டங்களில் நிலம் உள்ளிறங்குகிறதா?.. ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் காரணமா?
தமிழகத்திலுள்ள டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதால், நிலத்தடி நீர் பாதிக்கப்படும். டெல்டாவே உள்ளிறங்கி (subsidence) கொண்டிருக்கிறது. கடல் மட்டம் உயர்வதால் ஏற்படும் சிக்கலை விட டெல்டா உள்ளிறங்குவது பெரிய ஆபத்து என்று நாங்கள் விவாதிக்கும்போது எல்லாம், கிருஷ்ணா-கோதாவரி பகுதிகளை பாருங்கள், அங்கேயும் தான் எண்ணெய் துரப்பணிகள் நடைபெறுகின்றன என்று எதிர் வாதங்கள் வரும்.
தமிழகத்திலாவது கடந்த சில ஆண்டுகளாக தான் டெல்டாவில் நடைபெறும் துரப்பணிகள் தொடர்பாக போராட்டங்கள் நடைபெறுகின்றன, ஆனால் 2009 ஆம் ஆண்டு முதலே ஆந்திராவில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. வழக்கும் நடைபெற்று, வல்லுனர்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
புவிவெப்பமயமாதலால் கடல் மட்டம் சில மில்லி மீட்டர் உயர்ந்துவருகிறது, ஆனால் கிருஷ்ணா- கோதாவரி (KG Basin) டெல்டாவில், நிலம் 5.4 அடி உள்ளிறங்கியுள்ளது. டெல்டா உள்ளேபோவதற்கு காரணம், ஓ.என்.ஜி.சி. நடத்தும் எண்ணெய் துரப்பணிகளே என்று மக்கள் போராடுகிறார்கள். பல்வேறு அறிவியல் தரவுகள், கால்வாயில் ஓடும் நீரின் அளவு என எதை வைத்து பார்த்தாலும், டெல்டா உள்ளிறங்கிருப்பது தெளிவாக புலப்படுகிறது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஓ.என்.ஜி.சி. நடத்தும் எண்ணெய் துரப்பணிகளே டெல்டா உள்ளிறங்குவதற்கு காரணம் என்கிறார் ஆந்திர பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற நிலவியல் (geologist) நிபுணர், கிருஷ்ணா ராவ். செயற்கைகோள் படங்கள், தரவுகள், வரைபடங்கள் என்று எதை வைத்து பார்த்தாலும் நிலவியல் அமைப்பில் மாற்றங்கள் நிகழ்துள்ளதை சரியாக கண்டறிய முடிகிறது.
இதுகுறித்து, ஓ.என்.ஜி.சி. நடத்திய இரண்டு ஆய்வுகளின் முடிவுகளை வெளியிட மறுக்கிறது, ஆனால் அந்த ஆய்வறிக்கையில், டெல்டா பகுதியில் நில அமைப்பில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது தெளிவாக தெரிகிறது. டெல்டா உள்ளிறங்குவது பெரிய பிரச்சனை தான்.
இப்போது என்ன சொல்வீர்கள் தேச பக்தர்களே?
- சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்