அதிமுகவுடன் கூட்டணி தொடரும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அறிவிப்பு !
சென்னை: வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கூட்டணி தொடரும் என அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வருகிற மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு இப்போதே அதற்கான வேலைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
அரசியல் கட்சிகளை பொறுத்த வரையில் யார் யாருடன் கூட்டணி வைக்கப்போகிறார்கள் என்ற கூட்டணி கணக்கு பேச்சுவார்த்தை தற்போது மறைமுகமாக தொடங்கி உள்ளது. பிரதான கட்சியான திமுக நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தின் மூலம் ஏறத்தாழ அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை முடித்து விட்டது.
நமக்கு நாமே பயணம் மேற்கொண்ட அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் பல்வேறு தரப்பட்ட மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதேபோல் அதிமுகவும் தனக்கே உரிய பாணியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டது.
இந்த நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை நேற்று சந்தித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தமிழக வாழ்வுரிமை கட்சி கூட்டணியை தொடர உள்ளதாகவும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்பார் எனவும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்கும்படியும் ஜெயலலிதாவிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.