அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படத்தை அகற்றாவிட்டால் போராட்டம் – தமிழிசை சவுந்தர்ராஜன்
சென்னை: தமிழ்நாட்டில் சட்டத்தின் முன் குற்றவாளியாக இருக்கும் ஜெயலலிதாவின் படத்தை அரசு அலுவலகங்களில் இருந்து நீக்கவில்லை என்றால் அதை அகற்றுவதற்காக தமிழக பாஜக போராட்டத்தில் இறங்க வேண்டியிருக்கும் என தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
பிரதமர் மோடியின் "துாய்மை இந்தியா" திட்டத்தின் படி சென்னையில் மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், அரசு அலுவலக வளாகங்களை சுத்தப் படுத்தும் பணியில் தீவிரமாக இறங்கி இருக்கின்றனர் தமிழக பாஜக வினர்.
அந்த வகையில் நேற்று சென்னை ராதாகிருஷ்ணன் நகரில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தை சுத்தப்படுத்தும் பணியில் பாஜக வினர் ஈடுபட்டனர்.

தூய்மையாக்கும் பணி:
நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற தமிழிசை சவுந்தரராஜன், "பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் துாய்மையாக்கும் பணியில் லட்சக்கணக்கான பாஜகவினர் களம் இறங்கி செயல்பட்டு வருகின்றனர்.
மக்களிடம் விழிப்புணர்வு:
தமிழகத்திலும் இந்த பணி நாள்தோறும் நடந்து வருகிறது. மோடி சொல்லிவிட்டார் என்பதால் இந்தப் பணி நடைபெறுவதால் நாடு முழுவதும் துாய்மை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதேபோல பாஜகவினர் கட்சியை விரைந்து வளர்த்தெடுக்கும் பணியையும் வேகமாக செய்ய வேண்டும்.
ஊழல் கட்சிகள் தேவையில்லை:
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றதும் தமிழக மக்கள் மத்தியில் ஊழல் கட்சிகளை துரத்தி அடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் அரசியல் ரீதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
பாஜகதான் ஒரே கட்சி:
அந்த இடத்தை நிரப்ப வேண்டும் என்றால் அதற்கு ஊழல் இல்லாத கட்சிதான் வேண்டும். அதற்கான ஒரே கட்சி தமிழகத்தில் பாஜக மட்டும் தான்.
வெற்றிக்காக உழைப்பு:
மோடி சொன்னதும் துாய்மை இயக்கத்துக்காக களமிறங்கி செயல்படும் பாஜகவினர் அவரது எண்ணமான தமிழகத்திலும் பாஜக ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் பாஜக வெற்றிக்காக உழைக்க வேண்டும்.
புகைப்படத்தை அகற்ற வேண்டும்:
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னாலும் கிரிமினல் வழக்கில் குற்றவாளியாகி சிறையில் இருக்கும் ஒருவரின் படத்தை இன்னமும் முதல்வராக அரசு அலுவலகங்களில் வைத்துள்ளனர் அது தவறு.
முதல்வரிடம் கோரிக்கை:
உடனே அதை அகற்ற வேண்டும். இல்லையென்றால் அதை அகற்ற பாஜக போராட்டத்தில் இறங்கும். எனவே முதல்வர் பன்னீர்செல்வம் அதற்கான நடவடிக்கையில் உடனடியாக இறங்கி செயல்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications