காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க வேண்டும்... முப்படையினருடன் முதல்வர் ஆலோசனை!
கடற்படை, விமானப்படை, கடலோர காவற்படையினருடன் மீனவர்கள் மீட்பு நடவடிக்கை குறித்து சென்னையில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை : ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை மீட்பது தொடர்பாக, தலைமைச் செயலர் மற்றும் முப்படை அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
ஓகி புயலால் சேதத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. ஆனால் கன்னியாகுமரி மாவட்ட மீனவ கிராமங்களில் இன்றும் அழுகுரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஏனெனில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தங்களது உறவுகளின் கதி என்னவென்று தெரியாமல் கண்ணீர் கடலில் ஆழ்ந்திருக்கின்றனர் மக்கள்.
கடலில் காணாமல் போன மீனவர்கள் குறித்து சரியான எண்ணிக்கை அரசிடம் இல்லாத நிலையில், மீனவ மக்கள் கூறும் தகவலின் அடிப்படையில் மீனவர்களின் தேடுதல் வேட்டையானது தொடர்கிறது. இதனிடையே மாலத்தீவு மற்றும் அதைச் சுற்றியுள்ள கடல் பகுதியிலும் மீனவர்களைத் தேட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக கடலோர காவற்படை, விமானப்படை மற்றும் கப்பற்படையை சேர்ந்த அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஆர்.பி உதயகுமார், தலைமைச் செயலர், உள்துறை செயலர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.