ஓ.பன்னீர்செல்வம் பிற்பகலில் டெல்லி பயணம்... பிரதமர், குடியரசுத் தலைவரை சந்திக்கிறார்!
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பிற்பகலில் டெல்லி செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு பிரதமர், குடியரசுத் தலைவருக்கு நேரில் அழைப்பு விடுப்பதற்காக துணை முதல்வர் இன்று பிற்பகல் டெல்லி செல்ல உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை இன்றோ நாளையோ ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க நேரம் கோரப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னையில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி அவகாசம் கேட்டிருந்தார். நவம்பர் மாதத்திலேயே சென்னையில் பிரதமர் பங்கேற்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறும் என்று கூறப்பட்டது.

மேலும் சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு விழாவும் பிரதமர் முன்னிலையில் நடைபெறும் என்றும் சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் நவம்பர் மாதத்தில் இந்த இரண்டு நிகழ்ச்சிகளுமே நடைபெறாத நிலையில் இன்று எம்ஜிஆரின் 101வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி இன்று காலையில் முதல்வர், துணை முதல்வர் எம்ஜிஆரின் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில் இன்று பிற்பகல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி செல்ல உள்ளதாக தெரிகிறது. டெல்லி செல்லும் ஓ.பன்னீர்செல்வம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுப்பதோடு, பிரதமரிடம் நிகழ்ச்சிக்கான நாளையும் கோர உள்ளதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து எம்ஜிஆர்நூற்றாண்டு விழாவில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுக்க உள்ளார். குடியரசுத் தலைவருடனான சந்திப்பு உறுதிப்படுத்தப்படாத நிலையில், பிரதமரை இன்று மாலையோ அல்லது நாளையோ துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications