அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்... அரசாணை வெளியீடு!
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
சென்னை: ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ரூ. 1000 முதல் ரூ. 3 ஆயிரம் வரை பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் போனஸ் அறிவிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டப்பட்ட நிலையில் இன்று போனஸ் அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பொங்கல் திருநாளையொட்டி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போனஸ் மற்றும் சிறப்பு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
1) 2016-2017ம் ஆண்டிற்கு 'சி' மற்றும் 'டி' தொகுதியைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3,000 ரூபாய் என்ற உச்சவரம்பிற்குட்பட்டு 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையாக மிகை ஊதியம் வழங்கப்படும்.
2) சிறப்புக் கால முறை ஊதியம் பெற்று வரும் சத்துணவுத் திட்டப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் சிறப்பு கால முறை ஊதிய விகிதத்தில் பணிபுரிந்து வரும் பஞ்சாயத்து உதவியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுபவர்கள் மற்றும் ஒரு பகுதி தினக் கூலிகளாக பணியாற்றி பின்னர் நிரந்தரப் பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு 1,000 ரூபாய் சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.
3) உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்கலைக் கழக மானியக் குழு / அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு / இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் கீழ் சம்பள விகிதம் பெறுபவர்கள், அனைத்திந்தியப் பணி விதிமுறைகளின் கீழ் சம்பளம் பெறுபவர்கள் ஆகியோருக்கும் இந்த மிகை / சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications