எங்களை கேட்காமல் ஜல்லிக்கட்டில் உத்தரவு பிறப்பிக்காதீர்... உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு
ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் தமிழக அரசின் கருத்தைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை: ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பாக யார் வழக்கு தொடர்ந்தாலும் தமிழக அரசின் கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படவில்லை.

உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த நேற்று அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
அவசர சட்டம் பிறப்பித்த கையோடு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை எதிர்த்து யாரேனும் வழக்கு தொடரும் பட்சத்தில் அதில் தமிழக அரசின் கருத்தை உச்சநீதிமன்றம் கேட்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் கருத்தைக் கேட்காமல் உச்சநீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது என்றும் கேவியட் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு பீட்டா அமைப்பு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications