தமிழகத்துக்குள் நுழைந்து கொடிக் கம்பம் நட்ட கேரள கம்யூனிஸ்டுகள்- எல்லையில் பதற்றம்!
தமிழகத்துக்குள் நுழைந்து கேரள கம்யூனிஸ்டுகள் கொடிக்கம்பம் நட்டதால் எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது.
தேனி: தமிழகத்தின் கம்பம்மெட்டுக்குள் நுழைந்து கேரளா கம்யூனிஸ்ட் கட்சியினர் கொடி ஏற்றினர். இதைத் தட்டிக் கேட்ட தமிழக பத்திரிகையாளர்களை கம்யூனிஸ்ட் கட்சியினர் தாக்கி தரக்குறைவாகப் பேசியதால் எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.
தமிழகத்துக்கு கர்நாடகம் காவிரி தண்ணீரைத் தராமல் பிரச்சனை செய்கிறது. இது பல ஆண்டுகளாக தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்து வருகிறது.

கேரளா பிடிவாதம்
ஆந்திரா அரசு, பாலாற்றின் குறுக்கே அணைகட்டு தமிழக விவசாயிகளின் வாழ்க்கையை சிக்கலுக்குள்ளாக்க முயற்சித்து வருகிறது. கேரள அரசு, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என்று பிடிவாதம் காட்டுகிறது.

எல்லைப் பிரச்சனை
தற்போது கேரளா எல்லைப் பிரச்சனையை உருவாக்க முயல்கிறது. தமிழகத்தின் கம்பம்மெட் பகுதிக்குள் நுழைந்து கேரளா கம்யூனிஸ்ட் கட்சியினர் கொடிக் கம்பம் நட்டி கொடி ஏற்ற முயற்சித்துள்ளனர். இதைத் தட்டிக்கேட்ட கம்பம் வனத்துறை அதிகாரிகளிடம் அவர்கள் தகராறு செய்துள்ளனர்.

போலீசில் புகார்
இதையடுத்து,வனத்துறையினர் கம்பம் வடக்குக் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த செய்தியை அறிந்த பத்திரிகையாளர்கள், கொடிக்கம்பம் நிறுவப்பட்ட இடத்துக்கு செய்தி சேகரிக்க சென்றனர்.

எல்லையில் பதற்றம்
ஆனால், கேரள கம்யூனிஸ்டுகளும் காவல்துறையினரும் தமிழக பத்திரிகையாளர்களைத் தாக்க முயற்சித்தனர். அதுமட்டுமில்லாமல் தரக்குறைவாகப் பேசி அவமானப்படுத்தியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications