தமிழக மகிளா காங்கிரசுக்கு சவுமியா ரெட்டி பொறுப்பு.. நக்மாவை ஓரம்கட்டிய தலைமை..!
சென்னை: தமிழக மகிளா காங்கிரஸ் பொறுப்பாளராக கர்நாடகாவைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ.சவுமியா ரெட்டியை நியமனம் செய்துள்ளது காங்கிரஸ் தலைமை.
காங்கிரஸ் பேரியக்கத்தில் எதற்கு பஞ்சமிருக்கிறதோ இல்லையோ, கோஷ்டிபூசல்களுக்கு மட்டும் எப்போதும் பஞ்சமிருக்காது. தமிழகம் என்றில்லை, அகில இந்திய அளவில் ஏறத்தாழ அனைத்து மாநிலங்களிலும் இதே நிலைதான்.

அதிலும், மகிளா காங்கிரஸ் என்றால் சொல்லவா வேண்டும் குடுமிப்பிடி சண்டை நடக்காத குறைதான். இந்நிலையில் மகிளா காங்கிரஸ் தலைவராக உள்ள அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த சுஷ்மிதா தேவ் எம்.பி. மகிளா காங்கிரஸ் பிரிவை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அனைத்து மாநிலங்களுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து வரும் அவர், தமிழகத்துக்கு கர்நாடகாவைச் சேர்ந்த இளம் பெண்எம்.எல்.ஏ. சவுமியா ரெட்டியை நியமித்துள்ளார். சவுமிய ரெட்டி, யார் என்றால் கர்நாடகாவில் 7 முறை எம்.எல்.ஏ.வாக உள்ள ராமலிங்க ரெட்டியின் மகள். பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த சவுமியா ரெட்டி சூழலியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட மேல்படிப்பை அமெரிக்காவில் பயின்றவர். தொடக்கத்தில் காங்கிரஸ் இளைஞர் அணியில் இருந்த போது ராகுலின் குட்புக்கில் இடம்பெற்றவர்.

கடந்த 2018 தேர்தலில் பெங்களூருவில் உள்ள ஜெயநகர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வான சவுமியா ரெட்டி, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளராக பதவி உயர்வு பெற்றார். இந்நிலையில் தமிழக மகிளா காங்கிரஸை பலப்படுத்தும் பணிகளை அவர் தலையில் கட்டியுள்ளது தலைமை.

ஏற்கனவே நக்மா இந்தப் பொறுப்பில் இருந்தார். ஆனால் அவர் மகிளா காங்கிரஸை பலப்படுத்தவில்லை என்றும், மாறாக பலவீனப்படுத்துகிறார் எனவும் புகார்கள் பறந்ததால், அவரிடம் பொறுப்பு பறிக்கப்பட்டு கேரளாவை சேர்ந்த பெண் வழக்கறிஞரிடம் கொடுக்கப்பட்டது. இப்போது சவுமியா ரெட்டிக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஜெயநகர் தொகுதி மக்களிடையே படித்தவர், பன்பானவர், என்ற நற்பெயர் சவுமியாவுக்கு உண்டு.
தமிழகத்தில் எந்தளவு கட்சி வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடவுள்ளார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .













Click it and Unblock the Notifications