ரூ. 2 லட்சம் கோடி கடனில் தமிழகம்.. மக்கள் என்ன சொல்லப் போகிறார்கள்?.. ராசா கேள்வி
சென்னை: அதிமுக ஆட்சியில் தமிழகம் ரூ. 2 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கிறது என சென்னை ஆவடியில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா குற்றம் சாட்டியுள்ளார்.
ஆவடி நகர திமுக சார்பில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள், திமுக உதயமான நாள் ஆகிய முப்பெரும் விழா பொதுகூட்டம் நேற்றிரவு ஆவடி நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திமுக கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

திமுகவுக்கு மட்டுமே தகுதி...
பெரியார், அண்ணா ஆகியோரது தத்துவத்தைத் தாங்கித்தான் திமுக உள்ளது. இவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் தகுதி திமுகவுக்கு மட்டுமே உண்டு. அதிமுகவுக்குத் துளியும் கிடையாது. இந்தி மொழி எதிர்ப்பு போராட்டம் 1937-ல் தொடங்கியது. இப்போராட்டம் 4 கட்டங்களாக நடைபெற்றது.

கருணாநிதிக்கு மட்டுமே...
இந்த அனைத்து போராட்டங்களில் பங்கேற்ற தகுதி தலைவர் கலைஞருக்கு உண்டு. இந்தத் தகுதி ஜெயலலிதாவுக்குக் கிடையாது.

சாதனைகள்...
கலைஞர் ஆட்சியில்தான் மனிதனை மனிதனே இழுக்கும் கைரிக்ஷா ஒழிக்கப்பட்டது. பெண்களுக்கு சொத்தில் சமபங்கு, ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், விவசாய கடன் ரத்து, உடல் ஊனமுற்றோர் மாற்று திறனாளி என அழைக்கப்பட்டனர். இவ்வாறு கலைஞரின் ஆட்சியில் பல சாதனைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

கடனில் தத்தளிக்கும் தமிழகம்...
கடந்த பொதுத் தேர்தலின்போது, திமுக ஆட்சியில் ரூ. 75 ஆயிரம் கோடி கடன் உள்ளது என அதிமுக பிரசாரம் செய்தது. ஆட்சி மாற்றத்தையும் மக்கள் கொண்டு வந்தனர். ஆனால், இப்போது அதிமுக ஆட்சியில் ரூ. 2 லட்சம் கோடி கடனில் தமிழகம் தத்தளிக்கிறது. தமிழக மக்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?

காற்றில் பறந்த வாக்குறுதிகள்...
மேலும், அதிமுக பிரசாரத்தின்போது, வீட்டுக்கு வீடு பாதுக்காக்கப்பட்ட 25 லிட்டர் குடிநீர், 65 வயது முடிந்த முதியோர்க்கு உதவித்தொகை என கூறியது. ஆனால், அவர்களின் தேர்தல் வாக்குறுதி காற்றில் பறந்துவிட்டது.

மக்களுக்காக உழைக்கும் கருணாநிதி...
92 வயதிலும் தலைவர் கலைஞர், தமிழ் மக்களுக்காக உழைத்து வருகிறார். அவரது கரங்களை நாம் அனைவரும் வலுப்படுத்துவோம்''என இவ்வாறு அவர் உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications