ஏன் கூட்டுகிறாய் விலையை? எதற்கு அடிக்கிறாய் குடிகாரர் வயிறை?- சென்னையில் 'குடி'மகன்கள் போராட்டம்
சென்னை: மதுபான விலையை அதிகரிக்க கூடாது என்பதை வலியுறுத்தி சென்னையில் இன்று தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் (!) நடைபெற்றது.
மதுகுடித்தாலும் மானத்தோடு வாழ்ந்திட டவுசர் மாடல் ஜட்டிகளையே அணிவீர்! என்று போஸ்டர்களை அடித்து சில வாரங்களுக்கு முன்பு தமிழகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் அடுத்த அட்டாக்தான் இன்று நடைபெற்றுவரும் உண்ணாவிரதம்.
"அது என்ன குடிகாரன்னா இளக்காரமா.. எப்ப பார்த்தாலும் புஸ்சு.. புஸ்சுன்னு விலையை கூட்டிப்போடுறீங்க. நாங்க குடிச்சு விழுந்து கிடக்குறதாலதானய்யா கவர்மென்ட்டே ஸ்டெடியா.. நிக்குது" அப்படீன்னு மது வாடை கமழ தனது ஆதங்கத்தை நம்மிடம் கொட்டி தீர்த்தார் சங்க ஆதரவாளர் ஒருவர்.
சென்னை சேப்பாக்கத்தில்தான் குடிமகன்களின் உண்ணாவிரதம் ஜரூராக நடந்து வருகிறது. குடிச்சாதான் பல உண்மைகள் வெளியே வரும் என்பார்கள். அதேபோல குடிகாரர்கள் சங்கம் அடித்துள்ள போஸ்டர்களும் 'நச்'சென்று அரசுக்கு பல உண்மை கேள்விகளை எடுத்து முன்வைக்கிறது.
அந்த கேள்விகள் இவைதான்: 2015 முதல் வருடத்துக்கு நான்கு முறை மதுபான விலையை கூட்டப்போவதாக அறிவித்துள்ள அரசுக்கு கண்டணம்.
தமிழக அரசே, மதுபான விலையை கூட்டி நீங்க என்ன செய்ய போறீங்க?
மதுகுடிக்காத குடும்பங்களுக்கு மின்கட்டணம், பால்விலையை குறைப்பீர்களா?
மதுவால் கணவனை இழந்த பெண்கள், குழந்தைகள் அல்லது பெற்றோருக்கு மாதம் ரூ.5 ஆயிரம் நிவாரணம்தான் வழங்குவீர்களா?
கரும்பிலிருந்து மது தயாரிக்கப்படுவதால் கரும்பு விவசாயிகளுக்கு விலையை உயர்த்திதான் தருவீர்களா?
எதற்கு உயர்த்துகிறீர்கள் மதுவிலையை? ஏன் அடிக்கிறீர்கள் குடிகாரர்களின் வயிறை? என்பது போன்ற வாசகங்கள் அவர்கள் ஒட்டிய போஸ்டர்களில் உள்ளன.
இந்த உண்ணாவிரதத்துக்கு தலைமையாருன்னா, கவி.முத்தமிழன் என்பவராம். வரவேற்புரை, பி.தனக்கோட்டி, வாழ்த்துரை என்.நீலகண்டனாம்.
நாட்டுல இருக்குற பிரச்சினை போதாதுன்னு இவங்கவேறயான்னு யாரும் அலுத்துக்க வேண்டாம். நம்ம அரசுக்கே படியளக்குற சாமிங்க இவங்கதான். கன்னத்துல போட்டுக்கங்க பாப்போம்..