நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் லீவு.. கவலையில் மதுரை குடிமகன்கள் !
தேவர் ஜெயந்தி விழாவையொட்டி மதுரையில் அக்.27 முதல் அக்.30 வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை: மதுரை மாவட்டத்தில் அக்-27 முதல் 30-வரை நான்கு நாட்களுக்கு மதுபானக் கடைகள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 109 ஆவது பிறந்த நாள் மற்றும் 54 ஆவது குருபூஜை அக்-27 முதல் 30-வரைஅனுசரிக்கப்படுகின்றது.

இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் வெளியிட்டுள்ள அறிக்கை:
வருகிற அக்-29 மற்றும் 30-ஆகிய தேதிகளில் மதுரை மாவட்டத்தில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த சமயத்தில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு வரும் 27.10.2016 முதல் 30.10.2016 வரை டாஸ்மாக் சில்லரை விற்பனைக் கடைகள் மூடப்பட்டிருக்கும்.
தேவர் ஜெயந்தி விழா நடத்துவது தொடர்பான அனுமதியை, புறநகர் பகுதிக்கு டிஎஸ்பிக்களிடமும், மாநகரப் பகுதியில் துணைக் கமிஷ்னரிடமும் விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஊர்வலம் செல்வோர் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் ஊர்வலத்தை துவக்கி பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அமைதியாக சென்றடைய வேண்டும். இரவு 10 மணிக்குள் நிகழச்சிகளை நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விளம்பர பதாகைகள், பேனர்கள் வைக்க அனுமதி கிடையாது.
ஊர்வலத்தில் செல்பவர்கள் பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை. ஒரு தரப்பினர் தேவர் சிலைக்கு மாலை போட்டு சென்ற பிறகே மற்ற தரப்பினர் மாலையிட அனுமதிக்கப்படுவர். இவ்வாறு பல்வேறு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications