தமிழகம் முழுவதும் தெருத் தெருவாக அலையும் டாஸ்மாக் ஊழியர்கள்... எதற்காக?
நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் அதற்கு மாற்றாக ஊருக்குள் வேறு இடத்தை தேடி டாஸ்மாக் ஊழியர்கள் தெரு தெருவாக அலைந்து வருகின்றனர்.
சென்னை: நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் அதற்கு மாற்றாக வேறு இடத்தைத் தேட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதால் ஊழியர்கள் தெரு தெருவாக அலைந்து வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளில் குடித்து விட்டு வாகனங்களை ஓட்டுவதால் பெரும் விபத்துகள் நிகழ்வதாக கூறி நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டர் தூரத்துக்குள்பட்ட மதுபானக் கடைகளை மார்ச் 31-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று கடந்த டிசம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் படி தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள 3000-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில் அக்கடைகளின் ஊழியர்கள் தங்களுக்கு மாற்று பணிகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் போராட்டம்...
ஆனால் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பேருந்து நிலையங்களைச் சுற்றியுள்ள கடைகளை மூடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சிலர் கடைகளின் முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
கடைகள் மூடல்
குடிமகன்கள் குடித்து விட்டு அங்கேயே அலங்கோலமாக படுத்துக் கிடப்பது அருவருப்பாக உள்ளதாகவும், டாஸ்மாக் கடைகளை கடந்து செல்லவே பெண்களும், சிறுமிகளும் அஞ்சுகின்றனர் என்பதாலும் கடைகளை மூட வேண்டும் என்றும் மக்கள் கோருகின்றனர். இதனால் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் இடங்களில் உள்ள கடைகள் மூடப்பட்டு வருகின்றன.
அதிகாரிகளிடம் முறையீடு
இப்படிக் கடைகள் மூடப்படுவதால், அக்கடை ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. தங்களுக்கு மாற்று பணி வழங்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட டாஸ்மாக் தலைமையகங்களில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாற்று இடம் தேடுங்கப்பா
அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள், சில நாள்கள் பொறுத்திருக்கும்படியும், அதற்குள் மூடப்பட்ட கடைகளுக்கு மாற்று இடங்களை தேடக் கோரியும் உத்தரவிட்டனர்.
கிலியில் ஊழியர்கள்
மூடப்பட்ட அனைத்து கடைகளிலும் சரக்குகள் அப்படியே கிடப்பதால் போதை தலைக்கேறி கடையை உடைத்து சரக்குகளை திருடி விட்டால் அதற்கும் தாம்தான் பதில் சொல்ல வேண்டுமே என்ற கிலியில் ஊழியர்கள் மாற்றுக் கடைகளுக்கு அலைந்து கொண்டிருக்கின்றனர்.
ஊருக்குள்ளும் பிரச்சினை வந்தால்!
மேலும் ஊருக்குள் கடைகள் வைத்தாலும் மறுபடியும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இந்த கடைகளையும் மூடவைத்து விட்டால் தங்களது வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டு நிற்கின்றனர்.