எல்லையில் டாஸ்மாக் கடை அகற்றம் - பொது மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தமிழக, கேரள எல்லைப் பகுதியான சமுதாயபற்று என்ற பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து அப்பகுதி மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தமிழக கேரள எல்லைப் பகுதியான சமுதாயபற்று என்ற பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜீன் 17ம் தேதி டாஸ்மாக் கடை அமைக்கபட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அப்போது அவர்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர்.

போலீசார் தடுத்தியபோது போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலைத் தொடர்ந்து காவல்துறையினர் பொதுமக்கள் மீது தடியடி நடத்தினர். இதில் காவல்துறை வாகனங்களும் கல் வீசி தாக்கப்பட்டது. டாஸ்மாக் கடையும் சூறையாடபட்டன.
இது தொடர்பாக மேல்புறம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜார்ஜ் உட்பட 48 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் படிப்படியாக டாஸ் மாக் கடைகள் மூடப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி நேற்று தமிழக்கத்தில் உள்ள 500 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனிடையே கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதில் தமிழக கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இந்த டாஸ்மாக் கடையும் ஒன்று. இதனால் மகிழ்ச்சி அடைந்த அந்தப் பகுதி மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.












Click it and Unblock the Notifications