நாகர்கோவிலில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்ட பொதுமக்கள்- அதிர்ச்சியில் அதிகாரிகள்!
நாகர்கோவிலில் பல முறை எடுத்துக் கூறியும் காதில் வாங்காத அதிகாரிகளுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் டாஸ்மாக் கடைக்கு மாற்றுப் பூட்டு போட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
நாகர்கோவில்: மணவாளக்குறிச்சி அருகே டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யாததால் அந்த கடையை திறக்க விடாமல் பொதுமக்கள் பூட்டு போட்டு பூட்டினர். இதனால் கடைக்கு வந்த குடிமகன்கள் ஓட்டம் பிடித்தனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டருக்குள் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் கடந்த ஏப்ரல் மாதம் மூடப்பட்டன. அதன்படி குமரி மாவட்டத்தில் 59 மதுக்கடைகள் மூடப்பட்டன.
மூடப்பட்ட கடைகளுக்கு பதிலாக மாற்று இடங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் நாகர்கோவில் இருளப்பபுரம் ரோட்டில் தனியார் கட்டிடத்தில் திடீரென புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்தக் கடையில் இருந்து சுமார் 50 அடி தூரத்தில் ஏற்கனவே டாஸ்மாக் கடை உள்ளது. அப்படி இருக்கையில் திடீரென புதிதாக டாஸ்மாக் கடை திறந்த தகவல் அறிந்ததும் பொதுமக்கள் திரண்டனர்.
கடையை உடனடியாக மூட வேண்டும் என கூறினர். இதனால் ஊழியர்கள் கடையை மூடி விட்டு சென்றனர். ஆனால் அந்த கடையை அவர்கள் மூடவில்லை. தொடர்ந்து செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த வெகுண்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடை முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் குறித்து அறிந்ததும் கோட்டார் சப் இன்ஸ்பெக்டர் சுபாஷ் தலைமையில் போலீசார் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் கூறுகையில், ஏற்கனவே இந்த பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் புதிதாக கடை திறந்துள்ளனர். இந்த பகுதியில் தனியார் பள்ளி உள்ளது.
மேலும் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் இந்த வழியாக தான் செல்வார்கள். ஏற்கனவே அமைந்துள்ள டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. இந்த நிலையில் புதிதாக மேலும் ஒரு டாஸ்மாக் கடை திறந்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே கடையை திறக்க கூடாது என்றனர்.

இது பற்றி டாஸ்மாக் அதிகாரிகளிடம் பேசப்பட்டது. அவர்கள் கடையை திறக்க மாட்டோம் என உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். முன்னதாக அந்த பகுதி இருளப்பபுரத்தில் டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் பூட்டுப்போட்டனர்.












Click it and Unblock the Notifications