நரேந்திர மோடியின் கொடும்பாவியைக் கொளுத்திய தமிழ் தேசிய பேரியக்கம்...!
திருச்சி: தமிழ் தேசிய பேரியக்கம் அமைப்பினர் திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடியின் கொடும்பாவியைக் கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் 4 வார காலத்திற்க்குள் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு முதலில் சம்மதித்த மத்திய அரசு பின்னர் கர்நாடகத்தின் நிர்ப்பந்தத்திற்குப் பலியாகி தமிழகத்திற்கு எதிராக திரும்பி விட்டது.

இது தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜகவும் இந்த விவகாரத்தில் மத்திய அரசை இதுவரை பகிரங்கமாக கண்டிக்கவில்லை. மத்திய அரசின் இந்த தடைக்கு தமிழக அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும், எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து பல்வேறு வகையில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
அந்த வகையில் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தமிழ்தேசிய பேரியக்கம், கட்சி சார்பற்ற விவசாய சங்கம், உழவர் உழைப்பாளர் கட்சி, உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அப்போது பிரதமர் மோடியின் கொடும்பாவி தீவைத்துக் கொளுத்தப்பட்டது.
பிரதமர் மோடிக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டோர் குரல் எழுப்பினர். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து கொடும்பாவியை அணைத்து போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்தப் போராட்டம் காரணமாக பஸ் நிலையமே பரபரப்பாக காணப்பட்டது.












Click it and Unblock the Notifications