மானாமதுரையில் கோயில் பீடம் இடிப்பு: பொதுமக்கள் அதிருப்தி
மானாமதுரை: மானாமதுரையில் கோயில் பீடம் போலீசாரால் இடிக்கப்பட்ட விவகாரம் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மானாமதுரையில் இருந்து ஒரு கி.மீ தூரத்தில் சீனியப்பா நகர் அமைந்துள்ளது. 300க்கும் மேற்பட்ட பிளாட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
பிளாட்களில் கோயில், பள்ளி, குடிநீர் தொட்டி ஆகியவை கட்ட இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் பிளாட் விற்பனை செய்தவர்கள் பள்ளிகட்டிடம் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தை பிளாட் போட்டு விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளனர்.
மேலும் நகரின் முகப்பு பகுதியில் பொதுமக்கள் சார்பில் மாரியம்மன் கோயில் பீடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பிளாட் உரிமையாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் கோயில் பீடம் புறம்போக்கு நிலம் என கூறி பீடத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் பிளாட் உரிமையாளர்கள் இதுகுறித்து மானாமதுரை காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
இதனையடுத்து டிஎஸ்பி அன்பு, இன்ஸ்பெக்டர் பால்பாண்டி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். பின் ஜேசிபி இயந்திரம் மூலம் பீடம் அகற்றப்பட்டது. இது குறித்து சுமத்ரா என்பவர் கூறுகையில் சீனியப்பா நகரில் அடிப்படை வசதிகள் கிடையாது, சரி கோயிலாவது கட்டுவோம் என கூறி கட்டினோம் ஆனால் போலீசார் வந்து இடித்துவிட்டனர் என்றார்.. இதே கருத்தை ஜோதி மற்றும் குடியிருப்போர் நல சங்க தலைவர் வின்சென்ட் ஆகியோரும் தெரிவித்தனர்.