தென்காசியில் கோர விபத்து.. நேருக்கு நேர் மோதிய தனியார் பஸ்கள்.. 7 பேர் உயிரிழப்பு! 28 பேர் படுகாயம்
தென்காசி: தென்காசி அருகே 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இடைகால் அருகே துரைசாமிபுரம் என்ற இடத்தில் தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில், 28-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தென்காசியில் இருந்து கேரளா உள்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நெல்லைக்கு ஒன் டூ ஒன் மற்றும் ரூட் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, தென்காசியில் இருந்து கடையநல்லூர், கோவில்பட்டி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் தனியார் பேருந்துகளும் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன.

நேருக்கு நேர் மோதிய பஸ்கள்
இந்த நிலையில்தான், தென்காசி அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பயணிகள் பலியாகினர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது.
தென்காசியில் இருந்து ஸ்ரீவல்லிபுத்தூர் சென்ற பேருந்தும் கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி வந்த பேருந்தும் நேருக்கு நேர் மோதின. இந்த பயங்கர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 6 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகியுள்ளனர்.
மேலும் 5 பேருக்கு தீவிர சிகிச்சை
இடைகால் அருகே உள்ள துரைசாமிபுரம் என்ற இடத்தில் தான் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கி 30 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 5 பேரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் பேருந்துகள் விபத்தில் சிக்கினவா? அல்லது அதிவேகத்தில் இயக்கியதால் விபத்து நிகழ்ந்ததா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தென்காசியில் ஏற்பட்ட இந்த சாலை விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்டமாக அந்த பஸ் ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான பஸ் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
தென்காசி கடையநல்லூரில் நேர்ந்த பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனைக்குள்ளாகியிருக்கிறேன். உடனடியாக, மாவட்டப் பொறுப்பு அமைச்சரான கேகேஎஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனை தொடர்புகொண்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல அறிவுறுத்தியுள்ளேன்.
விபத்து நேர்ந்த இடத்திலிருந்து பேசிய மாவட்ட ஆட்சியரை, அரசு மருத்துவமனைக்குச் சென்று, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சையை உறுதிசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன். இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர்களது குடும்பத்தினர்க்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்துள்ளவர்கள் விரைந்து நலம்பெற அரசு துணை நிற்கும். என்று முதல்வர் ஸ்டாலின் ட்வீட் பதிவிட்டுள்ளார்.
விஜய், அண்ணாமலை இரங்கல்
இதேபோல் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும் இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பல அரசியல் தலைவர்களும் இந்த சம்பவத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications