குற்றாலம் உட்பட தென்காசியில் உள்ள அனைத்து அருவிகள், அணைகளிலும் குளிக்க தடை! கலெக்டர் திடீர் உத்தரவு
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், மாவட்டத்தில் இருக்கும் அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க மறு அறிவிப்பு வரும் வரை தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுக்க கடந்த சில காலமாகவே நல்ல மழை பெய்து வருகிறது. கோடை வெயில் உச்சத்தில் இருந்த சூழலில் இந்த மழை வெப்பத்தைக் குறைத்து இதமான ஒரு சூழலை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலும் நல்ல மழை பெய்து வந்தது. இதனால் குற்றாலத்தில் இதமான சூழல் நிலவியது. தொடர்ந்து பெய்த மழையால் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் கொட்டியது.
குற்றாலம்: இதனால் குற்றாலம் அருவியில் குளிக்கச் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தந்தனர். தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பலத்த காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. கனமழை தொடர்ந்து பெய்யும் என வானிலை மையம் எச்சரித்த நிலையில், குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
பழைய குற்றாலம் அருவியில் மட்டுமே குளிக்கச் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் இன்று பொதுமக்கள் பலரும் அந் பழைய குற்றாலம் அருவியில் குவிந்தனர். அப்போது திடீரென பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட இந்த காட்டாற்று வெள்ளத்தால் அருவியில் நீர்வரத்து நொடிகளில் அதிகரித்தது. இதைச் சற்றும் எதிர்பார்க்காத சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினர்.
உயிரிழப்பு: இருப்பினும், நெல்லையைச் சேர்ந்த அஸ்வின் (17) என்பவர் இந்த வெள்ளத்தில் சிக்கிக் கொண்டான். குடும்பத்தினருடன் பழைய குற்றால அருவியில் குளித்துக் கொண்டிருந்த அஸ்வின் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டான். இந்த திடீர் வெள்ளம் குறித்த தகவல் கிடைத்த உடன் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மாயமான அஸ்வினை தேடினர். இருப்பினும், சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு அஸ்வின் சடலமாகவே மீட்கப்பட்டான். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரவு: இந்தச் சூழலில் தென்காசி மாவட்டத்தில் அடுத்த 5 நாட்களுக்குக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால், மாவட்டத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தடை: குற்றாலம் நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் என்பதால் குற்றாலத்திலுள்ள பிரதான அருவியான மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி மற்றும் இதர அருவிகளில் பெரும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் இதனால் மேற்கண்ட அருவிகள், அணைப் பகுதிகள் மற்றும் இதர சுற்றுலா பகுதிகளில் மறு உத்தரவு வரும் வரை பொது மக்கள் குளிக்கத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தென்காசியில் பெய்யும் கனமழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசி எண் - 1077 அல்லது 04633 290548 என்ற எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்..












Click it and Unblock the Notifications