கருணாநிதி, அன்பழகனுக்கு தென்காசி கோர்ட் சம்மன் - 75 வயது திமுக பிரமுகர் தொடர்ந்த வழக்கில்...!
நெல்லையில் திமுக உட்கட்சி தேர்தல் நடத்தாத பகுதிகளில் இம்மாதம் தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில், தென்காசியை சேர்ந்த 75 வயதான முகம்மது உசேன். அங்குள்ள 9வது வார்டில் கட்சி அவைத்தலைவர் பதவிக்கு மனு செய்திருந்தார்.
நகராட்சியில் 33 வார்டுகளில் 10 வார்டுகளுக்கு போட்டியின்றி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். முகம்மது உசேன் விண்ணப்பித்த வார்டுக்கு தேர்தல் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் தேர்தல் நடத்தவில்லை.
எனவே பொறுப்பாளர்களை நேரடியாக நியமிக்க கூடாதுஎன வலியுறுத்தி முகம்மது உசேன், தென்காசி முன்சீப் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
தனது மனுவில், திமுக 14-வது உட்கட்சி தேர்தல் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டது. தென்காசியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் 2, 8, 11, 18, 19, 24, 25, 26, 29, 30 ஆகிய 10 வார்டுகளுக்கு நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள 23 வார்டுகளுக்கு முறைப்படி தேர்தல் நடைபெற்று நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் கட்சி பத்திரிகையில் விடுபட்ட வார்டு, கிளை, வட்ட கிளை நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தென்காசி நகர தேர்தல் குறித்து எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை. இது ஜனநாயக நடைமுறைக்கு மாறுபட்டது.
தேர்தலை நடத்தாமல் நிர்வாகிகளை நியமித்து ஒருதலைபட்சமாக தனக்கு வேண்டிய நபர்களை பொறுப்பாளர்களாக அறிவிக்கும் வகையில், தேர்தல் ஆணையாளர் 1.2.2014 முதல் செயல்பட்டு வருகிறார். அவ்வாறு பொறுப்பாளர் பட்டியலையும் தலைமை கழகத்தில் ஒப்படைக்கப்போவதாக கூறி வருகிறார். அவ்வாறு செய்துவிட்டால் ஜனநாயகம் கேள்விக்குறியாகி விடும்.
எனவே தென்காசியில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 10 வார்டுகளை தவிர, மற்ற 23 வார்டுகளுக்கு கட்சி நிர்வாகிகள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட வேண்டும். அதுவரை யாரையும் பொறுப்பாளர்களாக நியமிக்க கூடாது என்று தடை உத்தரவு வழங்க வேண்டும் என்று கோரயிருந்தார் உசேன்.
இதை விசாரித்த நீதிபதி கவுதமன், திமுக ,தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் அன்பழகன், நெல்லை மாவட்டத்தில் கட்சி தேர்தல் நடத்தும் கட்சி பிரமுகர் விஸ்வநாதன் ஆகியோர் மார்ச் 3ல் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
சங்கரன்கோவிலில் திமுகவினர் கடும் மோதல்
இந்நிலையில் மேலிநீலிதநல்லூர் ஒன்றியத்தில் 213 வார்டுகள் உள்ளன.இதில் 150 வார்டுகளுக்கு தேர்தல் நடத்துமாறு திமுக தலைமை, ஒன்றிய செயலாளர் துரைராஜை அறிவுறுத்தியது.
அவர்,சாதகமாக உள்ள 65 வார்டுகளில் மட்டுமே தேர்தல் நடத்த முன்வந்தார். இதற்கு திமுக ஒன்றிய பிரதிநிதி தங்கராஜ் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து சங்கரன்கோவிலில் திருமண மண்டபம் ஒன்றில் நடந்த திமுக கூட்டத்தில் இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். சேர்கள் உடைத்து வீசப்பட்டன. அடிதடியில் தங்கராஜின், ஆதரவாளர் முத்தையா பலமாக தாக்கப்பட்டார்.
திமுகவினரின் இந்த உட்கட்சி மோதலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.