தென்காசி நாடாளுமன்ற தொகுதி! திமுகவில் யாருக்கு வாய்ப்பு? சீட் ரேஸில் இடம்பெறும் முத்துச்செல்வி!
தென்காசி: தென்காசி மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் திட்டத்தில் உள்ள சிட்டிங் திமுக எம்.பி. தனுஷ்குமார் அதற்கான பணிகளை ஆரவாரமின்றி தொடங்க உள்ளார்.
இதனிடையே தென்காசி தொகுதியில் சீட் வாங்க தனுஷ்குமாருக்கு போட்டியாக மாஜி எம்.எல்.ஏ. முத்துச்செல்வியும் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இவர்கள் இருவர் மட்டுமின்றி இன்னும் பலரும் எம்.பி.சீட் ரேஸில் இடம்பெற்றிருக்கிறார்கள். இதில் திமுக தலைமையின் சாய்ஸ் யார் என்பது தான் இங்கு எழும் கேள்வியாகும்.

தென்காசி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை தென்காசி, சங்கரன்கோவில், ராஜபாளையம், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், ஸ்ரீவில்லிபுதூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும். தனுஷ்குமார் எம்.பி.யை பொறுத்தவரை விருதுநகர் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராகவும் உள்ளார்.
இதனால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பரிபூரண ஆசியும் அவருக்கு உண்டு. தனக்கு மீண்டும் சீட் கிடைப்பதில் சிக்கல் இருக்காது எனக் கருதும் தனுஷ்குமார் மாவட்ட பொறுப்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை நம்பி உள்ளார். இதனிடையே அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துச்செல்வியும் தென்காசியில் எம்.பி. சீட் வாங்கிவிட வேண்டும் என முயற்சிக்கிறார்.
தென்காசி மக்களவைத் தொகுதியை பொறுத்தவரை அது தனித் தொகுதியாகும். இதனிடையே எதிர்தரப்பில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. இதனால் அவரை எதிர்த்து யாரை வேட்பாளராக களமிறக்கினால் நன்றாக இருக்கும் என திமுக தரப்பில் சைலண்ட் சர்வே பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போது புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியை எதிர்த்து போட்டியிட்டு வென்றவர் தான் சிட்டிங் திமுக எம்.பி. தனுஷ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே அவரது 5 ஆண்டுகால செயல்பாடுகள் மக்கள் மத்தியில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது இப்போது முக்கியமாக பார்க்கப்படுகிறது.
தென்காசி மக்களவைத் தொகுதியை பொறுத்தவரை கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ள பகுதி என்பதால் சுற்றுலாவும், இயற்கை எழில் கொஞ்சும் விவசாயமும் பிரதான தொழிலாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications