வேலூரில் இந்து முன்னணி நிர்வாகிகளின் வீடு, பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீச்சு- மறியல், தடியடி
வேலூர்: வேலூரில் இந்து முன்னணி கோட்டத் தலைவர் வீடு மற்றும் மாவட்ட துணைத் தலைவரின் பேருந்து மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதைக் கண்டித்து மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
வேலூர் சத்துவாச்சாரி பிராமணர் தெருவைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் இந்து முன்னணி வேலூர் கோட்டத் தலைவர். நேற்று அதிகாலை மகேஷ் தனது குடும்பத்தினருடன் வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்தார். அப்போது, அவரது வீட்டின் வெளியே சத்தம் கேட்டது. இதையடுத்து, மகேஷ் வெளியே வந்து பார்த்தபோது வீட்டின் வராண்டா வில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது பெட்ரோல் நிரப்பிய பிளாஸ்டிக் கவர்கள் வீசப்பட்டிருந்தன.
இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு மகேஷ் தகவல் கொடுத்தார். உடனே, போலீசார் விரைந்து வந்து சோதனை நடத்தினர். இதில், பிளாஸ்டிக் கவரில் நிரப்பப்பட்ட பெட்ரோல் பாக்கெட்கள் வீட்டின் வராண்டாவிலும், 3 பெட்ரோல் குண்டுகள் வீட்டின் கூரை மீதும் வீசப்பட்டு இருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தகவலறிந்த வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் அஜய் சீனிவாசன், வேலூர் தடயவியல் உதவி இயக்குநர் பாரி ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
இதேபோல், இந்து முன்னணியின் மாவட்ட துணைத் தலைவர் டி.கே.டி.சீனிவாசனுக்கு சொந்தமான பேருந்து வேலூர் டி.கே.எம். கல்லூரி சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த வாகனத்தின் மீதும் நேற்று காலை மர்ம நபர்கள் பிளாஸ்டிக் பெட்ரோல் கவர்களை வீசி, பேருந்துக்கு தீ வைத்துள்ளனர். இதைப் பார்த்த அப்பகுதியினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதில் பேருந்து இருக்கைகள் சேதமடைந்தன.
இந்த சம்பவத்தைக் கண்டித்து, இந்து முன்னணியினர் சத்துவாச்சாரியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார் அங்கு வந்தனர். அப்போது, இந்து முன்னணியினர் போலீசாருடன் வாக்குவாதம் செய்து, பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
பின்னர் பெங்களுரூ- சென்னை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட் டத்தைக் கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோல், ஆற்காடு, வாலாஜா, குடியாத்தம், ஆம்பூர், திருவண்ணாமலை, வந்தவாசி ஆகிய பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்து முன்னணி நிர்வாகிகள் வீடு, பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.