திண்டுக்கல் அரசு மேல்நிலைப் பள்ளி கழிவறையில் மாணவிகள் பயங்கர கதறல்- அலற வைத்த செல்போன் ஆசாமி!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவிகள் கழிவறையில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இளைஞர் ஒருவர் பதுங்கி இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கழிவறைக்கு சென்ற போது இளைஞர் ஒருவர் பதுங்கி இருந்தது கண்டு மாணவிகள் கதறி கூச்சலிட்டதால் அப்பகுதி பொதுமக்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தின் கடைக்கோடியில் கரூர் மாவட்ட எல்லைக்கு மிக அருகே உள்ளதுதான் குஜிலியம்பாறை. இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1,200 மாணவர், மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று முற்பகல் 11 மணிக்கு வழக்கமான இடைவேளை விடப்பட்டது. அப்போது மாணவிகள் கூட்டமாக கழிவறைக்குச் சென்றனர். அப்படி சென்ற மாணவிகள் திடீரென பயங்கரமாக அலறியபடியும் கத்தி கூச்சலிட்டபடியும் கழிவறைகளில் இருந்து வெளியே ஓடி வகுப்பறைகளில் தஞ்சமடைந்தனர்.
இதனால் குஜிலியம்பாறை அரசு பள்ளி வளாகத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவிகளிடம் ஆசிரியர்கள் என்ன நடந்தது என கேட்டனர். அப்போதுதான், மாணவிகள் கழிவறையில் ஒரு நபர் பதுங்கி இருக்கிறார்; அவரிடம் செல்போனும் இருக்கிறது என அழுதபடியே மாணவிகள் தெரிவித்தனர். இதனடிப்படையில் ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக மாணவிகள் கழிவறை பகுதிக்குச் சென்றனர்.
அங்கு மாணவிகள் கூறியபடியே செல்போனுடன் பதுங்கி இருந்த ஆசாமியை சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர் ஆசிரியர்கள். பின்னர் குஜிலியம்பாறை போலீசாருக்கும் ஆசிரியர்கள் தகவல் கொடுத்தனர். இதனடிப்படையில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு விரைந்து வந்த போலீசார், மாணவிகளின் கழிவறையில் பதுங்கி இருந்த செல்போன் ஆசாமியை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் போது, அந்த நபரின் பெயர் செந்தில் குமார் என தெரியவந்தது. அத்துடன் போலீசாரின் விசாரணைகளுக்கு தெளிவான பதில்களை தராமல் குழப்பமான தகவல்களையே அந்த நபரான செந்தில்குமார் தெரிவித்திருக்கிறார். தற்போது செந்தில்குமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குஜிலியம்பாறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications