8 வழிச்சாலைக்கு பதில் இதை செய்யலாம்.. தங்க தமிழ்ச் செல்வன் அட்வைஸ்
மக்கள் எதிர்க்கும் 8 வழிச்சாலை திட்டத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்கக் கூடாது என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: மக்கள் எதிர்க்கும் 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்கக்கூடாது என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் இன்று வியாழக்கிழமை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
சேலத்தில் ஏற்கெனவே மத்திய சாலைகள் 2 மாநில சாலைகள் 2 என மொத்தம் 4 சாலைகள் உள்ளன. அந்த சாலைகளில் 2 வழிச் சாலையை 4 வழிச் சாலையாகவோ, 4 வழிச் சாலையை 8 வழிச் சாலையாகவோ மாற்றலாம். இல்லாவிட்டால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள சாலையை 8 வழி சாலையாக மாற்றலாம்.
அதை விடுத்து, நான் கேள்விப்பட்ட வரையில், 2 லட்சம் மரங்கள், 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் என விவசாயிகளை பாதிக்கும் சாலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சரியில்லை. 1 ஏக்கர், 2 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் நிலத்தை இழந்துவிட்டு என்ன செய்வார்கள்? அதனால், மக்கள் எதிர்க்கும் 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தில் அரசு பிடிவாதம் பிடிக்கக்கூடாது.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் எனக்கு நம்பிக்கை இல்லாததால் வழக்கை வாபஸ் பெறுகிறேன். மற்றவர்கள் வழக்கை தொடர்வார்கள். இதை வைத்து ஊடகங்கள் எங்கள் அணியில் பிரிவினையாகக் காட்டாதீர்கள்." என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.
இதையடுத்து, தங்க தமிழ்ச்செல்வனுடன் இருந்த, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கர்நாடகா மாநில பொறுப்பாளர் புகழேந்தி கூறியதாவது:
ஜெயலலிதாவால் ஆறுமுறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதா பற்றி பேசியது தவறானது. முதலமைச்சர் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று அறிவிப்பதற்கு முன்பாகவே மதுரையில் ஒரு அமைச்சர் அதை அறிவிக்கிறார்.
இங்கு எல்லாமே தலைகீழாக நடந்துகொண்டிருக்கிறது. ஜெயலலிதாவை இழிவுபடுத்தி பேசியதற்கு திண்டுக்கல் சீனிவாசன் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் எங்களுடைய துணை பொதுச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும்" என்று கூறினார்.