நாஞ்சில் சம்பத் சென்றது வருத்தம் அளிக்கிறது- தங்கதமிழ்செல்வன்
நாஞ்சில் சம்பத் எங்கள் அணியிலிருந்து விலகியது வருத்தம் அளிக்கிறது என்று தங்கதமிழ்செல்வன் தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: நாஞ்சில் சம்பத் டிடிவி தினகரன் அணியிலிருந்து விலகி சென்றது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது என்று தங்கதமிழ்செல்வன் தெரிவித்தார்.
தினகரன் அதிமுகவை மீட்பதற்காக அரசியல் அமைப்பு ஒன்றை கடந்த 15-ஆம் தேதி தொடங்கினார். அதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரை சூட்டினார்.
இந்த பெயரில் திராவிடமும் இல்லை, அண்ணாவின் பெயரும் இல்லாததால் நாஞ்சில் சம்பத் அதிருப்தி அடைந்ததாக இரு தினங்களாக சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் டிடிவி தினகரன் அணியிலிருந்து விலகிவிட்டதாக இன்று திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.
அண்ணா திராவிடம் இல்லாமல் என்னால் பேச முடியாது என்று தெரிவித்த நாஞ்சில், அரசியலில் இருந்தும் விலகுவதாகவும் தெரிவித்தார். இதனால் டிடிவி தினகரன் தரப்பு அதிர்ச்சி அடைந்தது.
இதுகுறித்து அந்த அணியை சேர்ந்த தங்கதமிழ்செல்வன் கூறுகையில், நாஞ்சில் சம்பத் எங்கள் அணியிலிருந்து விலகி சென்றது வருத்தம் அளிக்கிறது. அவரை மீண்டும் இணைத்து கொள்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார் தங்கதமிழ்செல்வன்.