ஒரு காட்டெருமையால் கதிகலங்கிப் போன ஊட்டி
ஊட்டி நகரில் உலா வந்த காட்டெருமையால் டாஸ்மாக் கடை மூடப்பட்டது
Recommended Video
ஊட்டி: காட்டெருமை ஒன்று காலை முதல் இரவு வரை ஊட்டி மக்களை படாதபாடு படுத்தி எடுத்து விட்டது.
ஊட்டியை சுற்றிலும் வனப்பகுதிகள் அதிகம். அதனால், காட்டெருமை, சிறுத்தை, புலி, மான், காட்டுயானை போன்ற வனவிலங்குகள் எப்போதும் சுற்றித் திரியும். ஆனால் வனவிலங்குகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாலும், போதிய உணவு கிடைக்காததாலும் வனப்பகுதிகளில் இந்த விலங்குகள் எல்லாம் வெளியேறி விடுகின்றன.
இப்படித்தான் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு காட்டெருமை இருந்ததை பார்த்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
புற்களை சாப்பிட்டது
ஊட்டி நகரின் நடுவில் காபிஹவுஸ் ரவுண்டானா என்ற பகுதி உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான ஒரு காலி இடம் உள்ளது. அந்த காலியிடம் முழுவதும் புல்வெளிதான். இந்த இடத்தில் காட்டெருமை ஒன்று படுத்து இருப்பதாக வனத்துறையினருக்கு நேற்று காலை தகவல் வந்தது. இதனால் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அங்கிருந்த புற்களை ஃபுல்லாக சாப்பிட்டுவிட்டு, காட்டெருமை ரெஸ்ட் எடுத்து கொண்டிருந்தது.
பரபரப்பான நேரம்
காட்டெருமை படுத்து கொண்டிருப்பது ஊட்டியின் முக்கியமான பகுதி. காலையிலிருந்து இரவு 8 மணி வரை பிஸியாகத்தான் இருக்கும். அந்த காலி இடத்திலிருந்து விரட்டினால் இந்த பிரதான சாலைக்குதான் காட்டெருமை வரவேண்டி இருக்கும். அந்த சாலையிலோ பள்ளி மாணவர்கள், வேலைக்கு போவோர் என சென்று கொண்டிருந்தனர். இப்படி பரபரப்பான நேரத்தில் காட்டெருமையை விரட்டி, சாலையில் செல்வோரை பயமுறுத்த வேண்டாம் என்று நினைத்து கொஞ்ச நேரம் ஊழியர்கள் காத்திருந்தனர்.
பிற்பகல் தாண்டியது
ஆனால் காட்டெருமை காத்திருக்கவில்லை. அது இஷ்டத்துக்கு எழுந்து பக்கத்திலுள்ள ஒரு குடியிருப்பில் புகுந்து கொண்டது. உடனே அங்கு ஓடிய வனத்துறையினர், குடியிருப்பு பகுதியிலிருந்து விரட்டினர். இதனால் காட்டெருமை, ஒரு வீட்டின் முன்பு புல்வெளியில் படுக்க போனது. ஆனால் அதற்கு முன்பு அங்கு வீசப்பட்டிருந்த ஒரு காலி மது பாட்டிலை மோந்து பார்த்தது. பிறகு அந்த பாட்டிலை சிறிது நேரம் உற்று பார்த்துவிட்டு அந்த புல்வெளியில் படுத்து கொண்டது. இப்போது, இந்த இடத்திலிருந்து எப்படி விரட்டுவது என வனத்துறையினர் யோசித்தனர். நேரமோ பிற்பகலை தாண்டிவிட்டது.
டாஸ்மாக் கடை
காட்டெருமை இப்படி அட்டகாசம் பண்ணி கொண்டு வந்த தகவல் ஊட்டி நகர பகுதி முழுவதும் பரவியது. இதனிடையே காட்டெருமை புல்லில் படுத்திருக்கும் பக்கத்திலேதான் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. எங்கே கடைமுன்பு வந்து காட்டெருமை படுத்து கொள்ளுமோ என்று நினைத்து ஊழியர்கள், டாஸ்மாக் கடையை மூடிவிட்டார்கள். இதனால் தண்ணி அடிக்க வந்தவர்கள் எல்லாம் டாஸ்மாக் கடை மூடப்பட்டிருப்பதை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கூடவே அங்கிருந்த காட்டெருமையையும் முறைத்து கொண்டே சென்றனர்.
சுற்றுப்புற மக்கள்
காலைமுதல் காத்து கொண்டே இருந்த வனத்துறையினர் காட்டெருமைக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தனர். அதை குடித்துவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டது. அதற்குள் போலீசாரும் வந்துவிட்டனர். மாலை நேரம் ஆகிவிட்டது. ஊட்டி நகரின் மையப்பகுதியில் காட்டெருமை உலா வந்த தகவல் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தெரிந்தது.
மீண்டும் படுத்துவிட்டது
அதனை தொடர்ந்து அப்பகுதிக்கு பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக காட்டெருமையை பார்க்க வந்தனர். சிலர் தங்களது வீட்டு மாடிகளில் இருந்து காட்டெருமையை வியப்புடன் பார்த்தனர். மேலும் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்தனர். இரவு 7 மணி வரையிலும் அந்தக் காட்டெருமையை விரட்ட முடியவில்லை. இரவு 9 மணிக்கு மேல் அதை விரட்ட வனத்துறைனர் தீர்மானித்தபோது, அது மீண்டும் படுத்துவிட்டது.
100 பேர் விரட்டினர்
ஆனால் காட்டெருமையை நள்ளிரவுக்குள் அருகிலுள்ள அரசினர் தாவரவியல் பூங்கா பகுதிக்கு கொண்டு சென்று விடுவதெனத் தீர்மானிக்கப்பட்டது. இரவு 11 மணி அளவில், போலீசார், வனத்துறையினர் என 100-க்கும் மேற்பட்டோர் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தினர். இதையடுத்து குடியிருப்புவாசிகள் கதவை பூட்டிக்கொண்டு வீட்டினுள் முடங்கினர். அரசு தாவிரவியல் பூங்காவை யொட்டிய வனப்பகுதிக்குள் காட்டெருமையை விரட்டினர்.