பாஜகதான் எங்களுக்கு நெருக்கம்.. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்காவின் இந்திய கிளை இயக்குனர் பரபரப்பு
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தின் இந்திய கிளையின் துணை நிறுவனர் அவ்னீஷ் ராய், தேர்தல் மோசடி குறித்து திடுக்கிடும் உண்மைகளை பகிர்ந்து இருக்கிறார்.
சென்னை: கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தின் இந்திய கிளையின் துணை நிறுவனர் அவ்னீஷ் ராய், தேர்தல் மோசடி குறித்து திடுக்கிடும் உண்மைகளை பகிர்ந்து இருக்கிறார். இந்திய தேர்தல்களில் மக்களின் தகவல்களை பயன்படுத்தி பாஜக எப்படி வெற்றி பெற்றது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த முறைகேட்டை பிரபல சேனல் 4 தொலைக்காட்சிதான் கண்டுபிடித்தது. அவர்கள் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பேஸ்புக்கில் மக்களின் தகவல்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி இருக்கிறது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்திய நிறுவனங்கள்
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்காவின் துணை நிறுவனமாக இந்தியாவில் ''ஸ்ட்ரேடஜிக் கம்யூனிகேஷன் லேபரட்ரிஸ்'' என்ற நிறுவனமும், 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' என்ற நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. இதில் ''ஸ்ட்ரேடஜிக் கம்யூனிகேஷன் லேபரட்ரிஸ்'' நிறுவனத்தின் இயக்குனரும், 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' நிறுவனத்தின் துணை நிறுவனருமான அவ்னீஷ் ராய், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் இந்திய தேர்தலில் முறைகேடு செய்ததை ஒப்புக் கொண்டு இருக்கிறார்.
நெருக்கம்
அவ்னீஷ் ராய் அளித்த பேட்டியில் ''எங்கள் நிறுவனத்துடன் பாஜக கட்சி மிகவும் நெருக்கமாக இருந்தது. ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த சஞ்சய் ஜோஷி, மத்திய அமைச்சர் நரேந்திர தாமோதர தாஸ் ஆகியோர்தான் எங்களை வந்து சந்திப்பார்கள். அவர்களிடம் தான் நாங்கள் தேர்தல் புள்ளி விவரங்களை அளிப்போம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
புள்ளி விவரம்
நாங்கள் பேஸ்புக்கில் எடுத்த புள்ளி விவரங்களை அவர்களிடம் அளிப்போம் . ஒரு மாநிலத்தில் ஜாதி ரீதியாக எப்படி ஓட்டுக்களை வாங்கலாம், எதை பேச வேண்டும், எதை பேச கூடாது, எந்த வயதில் அதிக வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்பது போன்ற தகவல்களை அளிப்போம். அதில் இருப்பதை பின்பற்றினால் எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியும் என்று அவ்னீஷ் ராய் குறிப்பிட்டு இருக்கிறார்.
என்ன தேர்தல்
உத்தர பிரதேச மாநில தேர்தல் முழுக்க நாங்கள் வேலை பார்த்து இருக்கிறோம். அதே போல் குஜராத்தில் சமீபத்தில் முடிந்த தேர்தல்களில் நாங்கள் முக்கிய பணியாற்றி இருக்கிறோம். 2011ல் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவன தலைவர் அலெக்ஸாண்டர் நிக்ஸ் இதற்காகவே இந்தியா வந்தார். அப்போது பாஜகவின் உறுப்பினர்கள் அவரை சந்தித்தார்கள் என்று அவ்னீஷ் ராய் குறிப்பிட்டு இருக்கிறார்.
கட்சிகள்
ஆரம்பத்தில் நாங்கள் காங்கிரஸ் கட்சிக்கு உதவி செய்த நினைத்தோம். ஆனால் அவர்களுக்கு நாங்கள் கொடுத்த புள்ளி விவரங்களை பிடிக்கவில்லை. பின் 2011ல் இருந்து பாஜக கட்சிக்காக வேலை செய்கிறோம். ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்காகவும் வேலை செய்துள்ளோம். உத்தர பிரதேசத்தில் பாஜக கட்சிக்காக மட்டுமே வேலை செய்தோம் என்று அவ்னீஷ் ராய் பேசியுள்ளார்.